கவனம் மக்களே! வேகமாக தண்ணீர் குடித்த இளம்பெண் மயங்கி விழுந்து பலி.. வாட்டர் பாய்சனிங் ரொம்ப மோசம்
வாஷிங்டன்: அதிகளவில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் "வாட்டர் பாய்சனிங்" என்ற பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த ஷாக் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதென்ன வாட்டர் பாய்சனிங். இதன் ஆபத்துகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
நமது உடல் 60% வரை நீரினால் ஆனது. இதன் காரணமாக நமது உடலில் போதியளவு நீர் இருப்பதை நாம் எப்போது உறுதி செய்ய வேண்டும். இதற்காக அடிக்கடி தண்ணீரைக் குடிக்க வேண்டும் என பொதுவாகச் சொல்வார்கள்.

இருப்பினும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.. அமிர்தமே நஞ்சு என்றால் தண்ணீரை மட்டும் விஷமாக மாறாமல் இருக்குமா... என்ன தண்ணீர் விஷமா என்று ஷாக் ஆகாதீர்கள்.. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
உயிரிழப்பு: அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் எதிர்பாராத விதமாகத் தண்ணீரை ஓவராக குடித்ததால் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற புதியது இல்லை என்ற போதிலும், இது மிக மிக அரிதாகவே ஏற்படும் உடல்நிலை பிரச்சினையாகும். வாட் பாய்சன் எனப்படும் நீர் நச்சுத்தன்மை காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்தியானாவைச் சேர்ந்தவர் ஆஷ்லே சம்மர்ஸ்.. கடந்த மாதம் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க வெளியே சென்ற போது திடீரென அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தான் அவருக்கு வாட்டர் பாய்சனிங் ஏற்பட்டது உறுதியானது.
உயிரைப் பறித்த நீர்: அதாவது அமெரிக்காவில் கடந்த மாதம் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதக்கியது. அதீத வெயில் அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. காரணமாக அவர் அடுத்தடுத்து நான்கு பாட்டில் தண்ணீரைக் குடித்துள்ளார். இதுவே அவர் உயிரைப் பறித்தது தான் சோகத்திலும் சோகம்.
இது குறித்து அவரது மூத்த சகோதரர் டெவன் மில்லர் கூறுகையில், "தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடத்தில் நான்கு பாட்டில் தண்ணீர் குடித்துள்ளார். இதாவது 20 நிமிடத்தில் சுமார் 2 லிட்டர் நீரைக் குடித்துள்ளார். இருப்பினும் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவருக்குச் சுயநினைவு திரும்பவில்லை. அதன் பின்னரே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவளுக்கு மூளை வீக்கம் ஏற்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே இருந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
வாட்டர் பாய்சனிங்: அப்போது தான் அவருக்கு வாட்டர் பாய்சனிங் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைந்தால் ஏற்படும் நீர் நச்சுத்தன்மை அதாவது வாட்டர் பாய்சனிங் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதை ஹைபோநெட்ரீமியா என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். மருத்துவர்கள் வாட்டர் பாய்சனிங் என்று முதலில் சொல்லிய போது, இதெல்லாம் ஒரு விஷயமா என்றே அவரது உறவினர்கள் முதலில் நினைத்துள்ளனர். ஆனால், அதுதான் அவரது உயிரைப் பறித்துள்ளது.
இந்த வாட்டர் பாய்சனிங் அரிதாக ஏற்படும் என்ற போதிலும், மிகவும் ஆபத்தானது. குறுகிய காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கும் போது இந்த வாட்டர் பாய்சனிங் ஏற்படும். அதாவது கிட்னியால் பிராசஸ் செய்யும் அளவை காட்டிலும் அதிக தண்ணீரைக் குடித்தால் இந்த ஆபத்து ஏற்படும்.
அறிகுறிகள்: வாட்டர் பாய்சனிங் ஏற்படும் போது, பொதுவாகத் தசைப்பிடிப்பு, வலி, குமட்டல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படும். இதுதான் முக்கிய அறிகுறிகள். நாம் உடனடியாக மருத்துவமனைக்கும் செல்ல வேண்டும். உரியச் சிகிச்சை இல்லையென்றால் உயிரிழப்பே கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
இது குறித்து அங்குள்ள மருத்துவர் பிளேக் ஃப்ரோபெர்க் கூறுகையில், "பொதுவாக இவை கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனென்றால் அப்போது தான் வெயில் காரணமாக திடீரென அதீதமாக நீரை எடுத்துக் கொள்வார்கள். இதுபோன்ற காரணங்களால் தான் வாட்டர் பாய்சனிங் ஏற்படும். உடலில் அதீத தண்ணீர் இருந்தும்.. உடலில் போதுமான சோடியம் இல்லாமல் போனால் இந்த பாதிப்பு ஏற்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications