தோசை மாவு அரைச்சிட்டீங்களா? "இதை" மட்டும் சேர்த்து பாருங்க.. சாதாரண இட்லியும், சத்தான இட்லியாகிரும்
சென்னை: தோசை, இட்லிக்கு அரைக்கும்போது, இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து அரைத்தாலே, பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள்.
இட்லி மிகச்சிறந்த உணவாக கருதப்பட்டு வருகிறது.. இட்லி சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.. இதற்கு காரணம், இட்லி மாவு புளிக்கும்போது, புரோ பயாடிக்குகளை உருவாக்குகிறது..

செரிமானம் மேம்படவும், நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்தவும் இந்த புளிப்பு மாவு அவசியம். அதேபோல, ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லிக்கு பெரும் பங்கு வகிக்கிறது... தசைகளும் வலிமையாகின்றன.
சுறுசுறுப்பு: மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பை தருவதற்கு இட்லி உதவுகின்றன. வாயு தொந்தரவு இருப்பவர்கள், தினமும் இட்லி சாப்பிடலாம்.. வயிற்றிலுள்ள புண்களும் ஆறிவிடும்.
ஒரே ஒரு இட்லியில் மட்டும் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கின்றனவாம்.. கொழுப்புச்சத்து இதில் கிடையாது என்பதே இதன் ஸ்பெஷாலிட்டியாகும்.
இட்லி மாவு: ஆனால், சாதாரண இட்லி, தோசையையும் சத்தானதாக மாற்றிக்கொள்ள வேண்டுமாம். அதாவது, மாவை புளிக்க வைக்க வெந்தயம் சேர்த்து அரைப்பார்கள், ஆனால் அப்படி செய்யாமல் கறுப்பு உளுந்து சேர்த்து அரைத்தால் அது ரத்த செல்களுக்கு ஆக்ஸினேற்றம் கிடைக்க செய்ய உதவுகிறது.. காரணம், இந்த உளுந்து பருப்பு தோலில்தான் Leuconostec Mesenteroides என்ற பாக்டீரியா நிறைய உள்ளது.
அதேபோல, அரிசி இட்லிக்கு பதிலாக, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லிகள் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். அரிசி இட்லி மட்டுமே சாப்பிட விரும்புபவர்கள், அரிசியும் உளுந்தும் சேர்த்து அரைக்கும்போது, சிறிது பாசிப்பயறு மட்டும் சேர்த்து அரைத்தால் போதும்.. அதன் நன்மைகள் பன்மடங்கு பெருகும்.
நார்ச்சத்துக்கள்: புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்B6, நியாசின், ஃபோலேட் போன்றவை அனைத்தும் இந்த பாசிப்பருப்பில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஜீரண மண்டலத்தையும் இந்த பருப்பு வலிமையாக்குகிறது.. ஏகப்பட்ட நார்ச்சத்து உள்ளதால், வயிற்றிலிருக்கும் சூட்டை நீக்குகிறது.. எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
அல்லது வெறுமனே பாசிப்பருப்பை வைத்து, மாவு அரைத்து இட்லி செய்யலாம்... இதற்கு பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இப்போது, வெறும் பருப்புகளை மட்டும் தனியாக எடுத்து, பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து அரைக்க வேண்டும்.
பட்டாணி: இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவுடன், சிறிது ரவை, சிறிது துருவிய காரட், துருவிய காளான், சிறிது வேகவைத்த பச்சை பட்டாணி, சிறிது தயிர், உப்பு போன்றவற்றை இட்லி மாவு பதத்திற்கு கலக்க வேண்டும். இப்போது இட்லி போல ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்தால் சத்தான இட்லி கிடைக்கும். அதேபோல ஆரஞ்சு, வெள்ளை, பச்சை என கலர்ஃபுல் இட்லியாகவும் கிடைக்கும்.
அல்லது கொள்ளு பருப்பு சேர்த்தும் இட்லி, தோசை செய்யலாம்.. கொள்ளு, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஊறவைத்து அரைக்க வேண்டும். இதிலேயே அரிசியையும் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும். இந்த மாவு புளித்ததும், இட்லி ஊற்றி எடுத்தால் போதும். சத்தான இட்லி தயார்.












Click it and Unblock the Notifications