சண்டி கீரை.. சண்டித்தனம் செய்யும் நோயை சல்லி சல்லியா நொறுக்கும் சண்டிக்கீரை.. வாவ் சண்டிக் கீரைகள்
சென்னை: வாதநோய் மற்றும் வாயுத்தொல்லையை நீக்கி, சிறுநீரகத்தை காக்கக்கூடிய கீரை என்றால், அது சண்டிக்கீரைதான்... உடலிலுள்ள கழிவுகளை அகற்றக்கூடிய இந்த கீரையின் பலன்கள் என்னென்ன தெரியுமா?
இந்த கீரைக்கு மட்டும் நிறைய பெயர்கள் உண்டு.. லச்லக்கெட்டை, லச்சக்கொட்டை, லச்ச கெட்ட கீரை, நஞ்சு கொண்டான் கீரை, நஞ்சுண்டான் கீரை, லஜ்ஜை கீரை, இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இலைகள்: அகலமான இலைகளை உடைய இந்த சண்டிக்கீரையை, பலர் அழகுக்காக வீடுகளில் வளர்ப்பார்கள்.. ஆனால், இதன் மருத்துவ பலன்களோ ஏராளம்.. வைட்டமின் A, C, நிறைந்த இந்த சண்டிக்கீரை, உடம்பிலுள்ள விஷத்தையே முறிக்கும் திறனுடையது.. அதனால்தான் இந்த கீரைக்கு "நஞ்சுண்டான் கீரை" என்று பெயர் வந்ததாம்.
உடலில் உள்ள நச்சுக்கள், அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது இந்த கீரை.. ரத்தத்திலுள்ள உப்பின் அளவை சீராக்கக்கூடியது.. வாத நோயால் பல நாட்கள் படுத்திருக்கும் நோயாளிகள், இந்த கீரையை உணவில் சமைத்து சாப்பிட்டாலே, எழுந்து நடமாடும் அளவுக்கு தெம்பாகிவிடுவார்களாம்.
மூட்டு வலி: மூட்டு வலி குறைய, இந்த கீரையை சமைத்து சாப்பிடுவார்கள்.. தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகிறதாம். மூட்டுப்பகுதிகளில் வீக்கம் அதிகமாக இருந்தால், இந்த கீரையின் இலைகளில் நல்லெண்ணெய் தடவி, இளஞ்சூட்டில் வீக்கம் மீது வைத்து கட்டுவார்கள். இதனால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.. சண்டித்தைலம் என்றே மூட்டுவலிக்கு, கடைகளில் விற்கிறார்கள்.
அதேபோல, உடம்பில் பித்தம் அதிகமாகி சூடு அதிகமாகிவிட்டாலும், இந்த கீரையை சமைத்து சாப்பிடும்போது பலன்தரும். நுரையீரலில் தொற்று இருந்தாலும், சளி இருந்தாலும் நிவாரணம் கிடைக்கும்..
எப்படி சமைப்பது: சண்டிக்கீரையை சுத்தம் செய்யும்போது, இதன் நடுவில் உள்ள நரம்பை, கத்தியால் கீறிவிட்டு, எடுத்து விட வேண்டும்.. நரம்பை நீக்கியபிறகுதான், பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். அதற்கு பிறகு, சாதாரண கீரைகளை போலவே இதையும், பொரியல், துவையல், கூட்டு, சாம்பார், செய்யலாம்.. சிலர் இதை பயன்படுத்தி சூப் செய்வார்கள். இந்த கீரையை பாசி பருப்பு போட்டு கூட்டு போல செய்யலாம்.
ஆண்களுக்கு வலிமை தரக்கூடிய இந்த லஜ்ஜை கீரையை, இயற்கை வயாக்ரா என்பார்கள். லஜ்ஜை என்றால் வெட்கம் என்று பொருள்... வெட்கத்தையே ஓரங்கட்டிவிடுமாம் இந்த லஜ்ஜை கீரை.. வெட்கம் மறந்து வேட்கை தீர்க்க தூண்டுமாம்.. ஆட்டு ரத்தத்தை பொரியல் செய்யும்போது, சண்டிக்கீரையையும் சேர்த்து சமைத்து சாப்பிட தருவார்கள்.
சிறுநீரக கற்கள்: சிறுநீரகக் கற்கள் உட்பட சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளை இந்த சண்டிக்கீரை தீர்க்கக்கூடியது.. இதனால், உடலில் ஏற்படும் வீக்கங்கள் தடுக்கப்படுகின்றன.. சிறுநீர் வெளியேறாவிட்டால், இந்த சண்டிக்கீரையை நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்ட, சிறிது வெந்தய தூள் கலந்து குடித்தாலே போதும். உடலுள்ள கழிவுகள், அசுத்த நீர் வெளியேறிவிடும். இதனால், உடல் எடையும் குறையும்.












Click it and Unblock the Notifications