உயிரையே எடுக்கும் டெங்கு காய்ச்சல்.. ஆரம்ப அறிகுறிகள் Vs தீவிர அறிகுறிகள்.. சிகிச்சை என்ன?
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த நோயின் அறிகுறிகள் என்னவென தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதமே வெகு சிலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. சற்று தீவிரமாக இல்லாவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவி வந்தது.

இந்த நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் தமிழகம், புதுவையில் அதிகளவில் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் இரு வகைகளாக பிரிக்கிறார்கள். அதில் ஆரம்ப அறிகுறி, தீவிர அறிகுறி ஆகும்.
அதாவது ஆரம்ப அறிகுறி என்றால் எப்படி இருக்கும். உடல் சோர்வு அதிகமாக காணப்படும். படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு உடல் வலி வாட்டி எடுக்கும். வலியால் தூக்கமும் வராது. 104 டிகிரி பாரன்ஹீட் வரை காய்ச்சல் இருக்கும். தலைவலி பயங்கரமாக இருக்கும். கண்களில் அதிக வலி இருக்கும். அத்துடன் கால்கள், மூட்டுகளில் வலி இருக்கும்.
உடலில் வலி அதிகமாக இருக்கும். முகம் வீங்கி போகும். கண்களும் வீங்கியிருக்கும். உடலில் ஆங்காங்கே தடிதடியாக படைகள் இருக்கும். அவை சிவப்பாக இருக்கும். அந்த படை இருக்கும் இடங்களில் அரிப்பை கொடுக்கும். அவ்வாறு சொரிய சொரிய தடிதடியாக வீங்கும். இவையெல்லாம் ஆரம்ப அறிகுறிகளாகும்.
இதிலும் பிளேட்லெட் குறைவதும் நடக்கும். இந்த பிளேட் லெட் பொதுவாக உடலில் 4.50 லட்சம் வரை இருக்கும். இந்த எண்ணிக்கை டெங்கு வந்த ஓரிரு நாளில் படிப்படியாக குறையும். பின்னர் சிகிச்சைக்கு பிறகு படிபடியாக உயரும். இந்த கவுன்ட் 1 லட்சத்திற்கு கீழ் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதே டெங்குவின் தீவிர அறிகுறிகள் எவை தெரியுமா? ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படும். அதிக அளவுக்கு உடல் அசதி, மாதவிடாய் காலமாக இருந்தால் உதிரப்போக்கு அதிகரிக்கும். மலம், சிறுநீரில் ரத்தம் வெளியேறும். தொடர்ந்து வாந்தி வரும், அந்த வாந்தியில் ரத்தமும் வரும். ரத்தம் வெளியேறினால் மேலும் மேலும் பிளேட்லெட் குறைய வாய்ப்புள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு மருந்து ஏதும் இல்லை. இதற்கு சப்போர்ட்டிவ் மருந்துகளைத்தான் கொடுக்க வேண்டும். அதிக நீராகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த டெங்கு காய்ச்சல் ஏடீஸ் எனும் கொசுக்களால் பரவுகிறது. இவை காலை வேளைகளில் கடிக்கும். இந்த டெங்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவ சிகிச்சை உடனடியாக தேவைப்படும்.












Click it and Unblock the Notifications