செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் நன்மை ஏற்படுமா? இது பெரிய ட்விஸ்ட்! பிரபல மருத்துவர் விளக்கம்
சென்னை: இப்போது செம்பு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதுபோல தண்ணீர் குடித்தால் நமது உடலுக்குச் செம்பு கிடைக்கும் என்றும் இதனால் உடலுக்குப் பல விதங்களில் நன்மை ஏற்படும் என்றே பலரும் நம்புகிறார்கள். ஆனால், இது அறிவியல் ரீதியாக உண்மை தானா என்பது பலருக்கும் தெரியாது. இது உண்மையில் பயனுள்ளது தானா எனப் பார்க்கலாம்.
அந்த காலத்தில் வீட்டில் இருக்கும் போது பலரும் சொம்பு போன்ற பாத்திரங்களில் தான் தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், இந்த காலத்தில் நாம் வீடுகளில் இருக்கும் நேரம் குறைவு தான். பள்ளி, அலுவலகம், காலேஜ் என வெளியே தான் அதிகம் செல்கிறோம்.

வெளியே செல்லும் இடத்திற்கு எல்லாம் சொம்பை எடுத்துச் செல்ல முடியாது. இதனால் பெரும்பாலானோர் வாட்டர் பாட்டிலில் தான் தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள்.
வாட்டர் பாடில்: பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் உடலுக்குக் கெடுதல் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. நமது உடலில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வுகளும் வெளியாகி வரும் நிலையில், பலரும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர். அதேநேரம் ஒரு சிலர் செம்பு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கவும் தொடங்கியுள்ளனர்.
இப்படி செம்பு வாட்டர் பாட்டிலில் குடித்தால் உடலுக்குள் செம்பு செல்லும் என்றும் இது உடலுக்குத் தேவையான தாதுவை வழங்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இதனால் ரூ. 800- 900 கொடுத்து பலரும் செம்பு பாட்டிலை வாங்குகிறார்கள். ஆனால், இது உண்மையாகவே உடலுக்குப் பயன் தருகிறதா இல்லையா என்பது பலருக்கும் தெரிவதில்லை.
செம்பு வாட்டர் பாட்டில்: இதற்கிடையே பிரபல குழந்தைகள் நல மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான அருண்குமார் இது தொடர்பாக விளக்கியுள்ளார். அவர் தனது யூடியூப் பக்கத்தில் இது தொடர்பாகக் கூறுகையில், "பலரும் செம்பு வாட்டர் பாட்டிலில் தண்ணீரைக் குடிக்கிறார்கள். நாம் குடிக்கும் போது தண்ணீரில் செம்பு கலந்து அது நமது உடலுக்குள் போனால் அது பல வித பயன்களை அளிப்பதாக நினைத்து பலரும் செம்பு தண்ணீரைக் குடிக்கிறார்கள். அறிவியல்பூர்வமாக இது உண்மை தானா என்பதைப் பார்க்கலாம்.
பொதுவாக நமது உடலில் பல வித தாதுகள் குறைபாடு ஏற்பட்டால் பல வித பாதிப்புகள் ஏற்படும்.. உதாரணமாக இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் அனீமியா பாதிப்பு ஏற்படும். இதுபோல ஒவ்வொரு தாது பற்றாக்குறை ஏற்படும் போது ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படுகிறது. அதேநேரம் செம்பு பற்றாக்குறையால் எந்தவொரு நோயும் ஏற்படாது.
நோய்: ரொம்ப ரொம்ப அரிதாகச் சிலருக்கு மட்டும் ஒருவித மரபணு நோய் ஏற்படும். அதுவும் செம்பை உள்ளெடுக்கும் திறன் மரபணு ரீதியாக மாற்றம் செய்திருந்தாலே அது ஏற்படும். இதை Menkes disease என்பார்கள். காய்கறி, கீரைகள், நட்ஸ் என்று பலவற்றில் செம்பு இருக்கிறது.. நமது உடலுக்கும் செம்பு தேவை மிக மிகக் குறைவு தான். அதுவும் இயற்கையாகவே கிடைத்துவிடும்.
நன்மை ஏற்படுமா: மேலும், செம்பு தண்ணீர் வைத்தால் அந்த செம்பு அப்படியே கரைந்து தண்ணீரில் மிக்ஸ் ஆகிவிடுமா என்றால் அதுவும் இல்லை. நாம் குடிக்கும் தண்ணீரைச் செம்பு பாத்திரத்தில் வைத்தாலும் செம்பு அதில் கலக்காது. அப்படிக் கலந்து உள்ளே போனாலும் நமது உடலுக்கு இதனால் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை" என்றார்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை மருத்துவ ஆலோசனையாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்களுக்கு உடல்நிலை பாதிப்பு எதாவது ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரிடம் செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications