Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீரிழிவு நோயாளிகளுக்கு லோ சுகர் வந்தால்! கோமாதான்! டாக்டர் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீரிழிவு நோயாளிகள் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாததால் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைவது ஆபத்தா என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னிடம் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமானது. எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. அதற்குரிய சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னால் நான் செய்யும் பணி நிமித்தமாக சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட இயலாத காரணத்தால் அடிக்கடி லோ சுகர் ஏற்படுகிறது. இது ஆபத்தான போக்கா?

dr farook abdulla diabetes

ஆம்... நீரிழிவு நோயர்கள் "லோ சுகர்" எனும் தாழ் சர்க்கரை நிலைக்கு அடிக்கடி தொடர்ந்து செல்வது அவர்களுக்கு நல்லதல்ல. ஏன்? வாங்க பாப்போம். நமது ரத்தத்தில் சரியான அளவில் சர்க்கரை அளவுகள் இருப்பது முக்கியமானது. நீரிழிவு நோயர்களைப் பொருத்தவரை அவர்களது ரத்தத்தில் மிகுதியான சர்க்கரை அளவுகள் இருக்கும். இதை ஹைப்பர் க்ளைசீமியா என்று கூறுகிறோம்.

நீரிழிவு கண்டறியப்பட்ட பின் அதற்குரிய சிகிச்சையைத் தொடங்குபவர்கள். மாத்திரை இன்சுலின் போன்றவற்றை எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று சரியான நேரத்தில் உணவு உண்பதும் முக்கியம். ஆனாலும் இது குறித்த விழிப்புணர்வு நம் மக்களுக்கு இருப்பதில்லை. காலை உணவை சாப்பிட்டு நீரிழிவிற்கான மாத்திரையை சாப்பிட்ட பின் அந்த மாத்திரை தனது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பணியைத் தொடங்கிவிடும்.

எனவே உணவுக்குப் பின் நாழிகைகள் செல்லச் செல்ல ரத்த சர்க்கரை அளவுகள் குறைந்து கொண்டே வரும். இதில் 70 மில்லிகிராம் எனும் அளவுக்குக் கீழ் ரத்த க்ளூகோஸ் அளவுகள் செல்லும் போது உடலில் அலாரம் அடிக்கும். படபடப்பு, வியர்த்துக் கொட்டுதல், லேசான தலை சுற்றல், தலைவலி, எரிச்சல் உணர்வு , அதீதப் பசி போன்றவை ஏற்படும்.

இதை துச்சமெனக் கருதி அவரவர் பணியை செய்து கொண்டிருந்தால் ரத்த க்ளூகோஸ் 40 மில்லிகிராமுக்குக் கீழ் குறையும் போது
மூளைக்குத் தேவையான க்ளூகோஸ் சரியாக செல்ல முடியாத காரணத்தால் மூளை செயல் முடக்கத்தில் ஈடுபடும். மூளைக்கு சில நிமிடங்களுக்கு மேல் க்ளூகோஸ் செல்லாமல் போனால் கோமா நிலை ஏற்பட்டு பிறகு மரணமும் சம்பவிக்கலாம்.

இந்த சூழ்நிலையில் ஒருவருக்கு அடிக்கடி தாழ் சர்க்கரை நிலை ஏற்படும் போது எப்படி நமது வீட்டில் நமது தாய் படிப்பதற்கு நம்மை விடியல் காலை எழுப்ப முயற்சிப்பார். ஆனால் நாம் எழுந்திருக்க மாட்டோம். மூன்று நான்கு நாட்கள் முயற்சிப்பார். பிறகு இவன எழுப்ப முடியாது என்று விட்டுவிடுவார். அதுபோலவே நமது உடல் ரத்த சர்க்கரை தாழ்நிலைக்குச் செல்லும் போது தன்னிசையாக இன்சுலின் சுரப்பு குறைந்தும் ரத்த சர்க்கரை அளவுகளை ஏற்றும் க்ளூகோகான் சுரப்பு அதிகமாகியும் ரத்த க்ளூகோஸ் அளவுகளை கூட்டும் பணியைச் செய்யும். இதை சிஆர்ஆர் ( CRR - COUNTER REGULATORY RESPONSE) என்று அழைக்கிறோம்.

எனினும் நீரிழிவு நோயர்களுக்கு இத்தகைய மீட்புப்பணி மிகவும் தொய்வாக இருக்கும் என்பதால் இந்தப் பணியை நமது சிறுநீரகங்களுக்கு மேல் உள்ள அட்ரினல் சுரப்பிகள் - எபிநெஃப்ரின் எனும் ஹார்மோனைச் சுரந்து செய்யும். எபிநெஃப்ரின் என்பது நமது உடலை ஆபத்தான நிலைகளில் இருந்து காப்பதற்கான ஸ்ட்ரெஸ் ஹார்மோனாகும். இது சுரக்கும் போது
நமது கல்லீரல் க்ளூகோஸை உற்பத்தி செய்து ரத்தத்தில் கலக்கும்.

ஆனால் எவர் ஒருவர் தொடர்ந்து லோ சுகர் நிலைக்கு அடிக்கடி உட்படுகிறாரோ அவருக்கு இந்த சிஆர்ஆர் கைகொடுப்பதில்லை. நாளடைவில் லோ சுகர் ஆனாலும் கூட எபிநெஃப்ரின் தேவையான அளவு சுரக்காது. இதனுடன் கூடவே தாழ் ரத்த சர்க்கரை நிலையை உணர இயலாத தன்மையும் ஏற்படும். இதை "ஹைப்போகிளைசீமிக் அன்அவார்னஸ்" என்கிறோம்.

ஒரு மாணவனை எப்போதாவது ஒரு முறை கண்டித்தால் அவன் கண்டிப்பின் தீவிரத்தை உணர்வான். அதுவே தொடர்ந்து கண்டிப்புடனும் தண்டிக்கும் நோக்கத்துடன் ஆசிரியர் கடினமாக செயல்படுவாராயின் மாணவன் அந்த கண்டிப்பை கண்டுகொள்ளாமல் போகும் நிலையும் உருவாகும் தானே?

அதே தான் நமது உடலிலும் நேருகிறது. முதலில் லோ சுகர் ஏற்படும் போது ஏற்பட்ட பதட்டம் , படபடப்பு, வியர்த்தல் , தலை சுற்றல் போன்ற அறிகுறிகள் அடுத்தடுத்து தொடர்ந்து அடிக்கடி லோ சுகர் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் இந்த அறிகுறிகள் எனும் அலாரம் அடிக்காமலே போய்விடும். இதை தாழ் சர்க்கரை நிலையால் ஏற்படும் தன்னிச்சை மண்டல செயலிழப்பு (HYPOGLYCEMIA ASSOCIATED AUTONOMIC FAILURE )என்கிறோம்.

தொடர்ந்து அடிக்கடி ஹைப்போகிளைசீமியா ஏற்படுபவர்களுக்கு மூளை தேய்மானம் மற்றும் இதய ரத்த நாள நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்பதையும் உணர வேண்டும். நீரிழிவு நோயர் சொந்தங்களே, உங்களின் உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளவும் , வெள்ளரிக் காய், நெல்லிக்காய் சாறு, கொய்யாக்காய், தேங்காய், மோர் , 50 கிராம் நிலக்கடலை/ சுண்டல்/பயறு
இனிப்பில்லாத பால் டீ/காபி போன்றவற்றை ஸ்நாக்ஸாக உட்கொள்ளலாம்.

இவற்றை மீறியும் தாழ் சர்க்கரை நிலை ஏற்பட்டால் தங்களின் மருத்துவரிடம் ஆலோசித்து மாத்திரை மற்றும் இன்சுலின் அளவுகளைக் குறைக்கவும். ஹைப்போகிளைசீமியா குறித்த விழிப்புணர்வு கொள்வோம். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+