நடக்கும் போது ஒரு பக்கமாக சாய்கிறீர்களா? பக்கவாதம் வர வாய்ப்பு.. டாக்டர் பரூக் அப்துல்லா வார்னிங்
சென்னை: தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன் என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறயிருக்கையில், அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் தங்களின் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உயர் ரத்த அழுத்தத்தின் முக்கியமான அறிகுறியாக அடிக்கடி ஏற்படும் தலைவலி இருக்கிறது.

பலரும் தலைவலிக்கு பாராசிட்டமால் அல்லது வெறுமனே தைலங்களை பூசி வருவதைக் காண முடிகின்றது. சமீபத்தில் என்னை அடிக்கடி தலைவலி என்று சந்திக்க வந்த நபருக்கு ரத்த அழுத்தம் 200/110mm Hg என்று இருந்தது. அவரும் தினசரி மருந்தகத்தில் வலி நிவாரணி மாத்திரையும் இரவில் தினசரி பணி முடிந்ததும் "மதிமயக்கும் பழரசம்" அருந்தி உறங்கச் சென்றுவிடுவாராம்.
சில நாட்களுக்கு முன் வேலை முடிந்து வந்தவர் தலை சுற்றி கீழே விழுந்துள்ளார். தலைவலி, தலைசுற்றல், நடக்கும் போது தள்ளாட்டம், நடக்கும் போது ஒருபக்கமாக சாய்ப்பது போன்றவை ரத்தக் கொதிப்பின் அறிகுறிகளாகும். இவற்றை உதாசீனம் செய்யாமல் முறையான சிகிச்சை எடுப்பது சிறந்தது.
கவனிக்கப்படாத ரத்தக் கொதிப்பு இதயத்தின் அறைகளின் தசைகளில் வீக்கத்தையும் செயலிழப்பையும் ஏற்படுத்தி இதயத்தின் செயல்திறன் குறையக்கூடும். ரத்த நாளங்களின் உள்பக்க சுவரில் உள்காயங்களை ஏற்படுத்தி ரத்த நாள அடைப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் இதய ரத்த நாள அடைப்பு ( மாரடைப்பு), மூளை ரத்த நாள அடைப்பு ( பக்கவாதம்) ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அடிக்கடி தலைவலி, தலைசுற்றல், போன்றவற்றிற்கு முறையான மருத்துவ சிகிச்சை பெற்று ரத்தக் கொதிப்பு இருப்பின் அதைக் குறைத்து சரியாக பராமரிப்பது நன்று. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications