பாடாய்படுத்தும் பிசிஓடி.. குணமாக்கும் கழற்சிக்காய் சூரணம்.. ஆண்கள், பெண்களுக்கு உதவும் அருமையான பொடி
சென்னை: 15 முதல் 45 வயது உள்ள பெண்களை பெருமளவில் தாக்கக்கூடிய பிசிஓடி தொந்தரவுகளை, அடியோடு சரிசெய்யக்கூடிய கழற்சிக்காய்களை பற்றி தெரியுமா? ஆண்களுக்கு ஏற்படும் விதை வீக்கம் பிரச்சனைக்கு கழற்சிக்காய் எந்தவகையில் உதவுகிறது தெரியுமா? இதனால் ஏற்படும் பிற நன்மைகள் என்னென்ன? கழற்சிக்காய் சூரணத்தின் மருத்துவ குணங்கள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நீண்ட நாட்பட்ட வயிறு உபாதைகள், வயிறு புண்கள் கட்டிகளை குணப்படுத்த கழற்சிக்காய் உதவுகிறது.. புதிதாக தூளாக்கப்பட்ட கழற்சி சூரணத்தை, ஆறாத கட்டிகளின் மீது பற்று போல போட்டுவந்தால் ஆறிவிடும்.

அதேபோல வாத நோய்களை குறைக்கவும், மூட்டு வலிகளை குறைக்கவும், இந்த கழற்சிக்காய் பவுடர் உதவுகிறது.. இருமல், ஆஸ்துமா, தோல் நோய்கள், பசியின்மை, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு, ரத்தக்கசிவு போன்றவைகளிலிருந்து விடுபடவும் கழற்சிக்காய் பயன்படுகிறது..
நீரிழிவு நோயாளிகள்
கழற்சிக்காய் சாப்பிடுவதால், ஈரல் வலுப்பெறும்.. மண்ணீரலும் உறுதிப்பெறும்.. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கசப்பு காய் மிகவும் நல்லது.. அதேபோல, கழற்சிக்காயை நெருப்பில் கொளுத்தி, சாம்பலாக்கி, அதில், படிகாரம், கொட்டைப்பாக்கு, கட்ட கரி போன்றவற்றை சேர்த்து பல் துலக்கி வந்தால் ஈறு நோய்கள் குணமாகும். பல் சொத்தை இருந்தாலும் சரியாகிவிடும்.
இந்த கழற்ச்சிக்காய் தோல் மற்றும் சரும பகுதிகளில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணமாக்கக்கூடியது.. உடல் சூடு, கொப்பளம், தொழு நோய் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
ஆண்ட்ரோஜன் - ஹார்மோன்
இத்தனை பலன்கள் இருந்தாலும், கழற்சிக்காயை, கர்ப்பபையிலுள்ள நீர்க்கட்டிகளை அகற்றவே பிரதானமாக உபயோகப்படுத்துகிறார்கள்.. இன்றைய இளம்பெண்களுக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் என்ற சொல்லக்கூடிய பிசிஓடி பிரச்சனைகள் அதிகமாக ஏற்பட காரணமே, உடலில் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைந்து, ஆண்களுக்கு சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் அளவு அதிகமாக சுரப்பதுதான்.
சமீபகாலமாக பிசிஓடி பிரச்சனைகள் அதிகமாகவே பெண்களை பாடாய் படுத்தி வருகிறது. இதனால், முகம், உடல், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் தேவையற்ற முடிகள் வளரும்.. உடல் எடை அதிகரிக்கும், தலைமுடி கொட்டும். ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை ஏற்படும். இதனால், கருத்தரிப்பதில் சிக்கல்களும் பெருகி வருகின்றன.
கழற்சிக்காய் தெலுக்காய்
இதற்கெல்லாம் கழற்சிக்காய் சூரணம் உதவுகிறது.. கச்சக்காய், தெலுக்காய் என்று சொல்லக்கூடிய கழற்சிக்காய்களை உடைத்து, அதற்குள் இருக்கும் பருப்பை காயவைத்து, தூள் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதில், கால் ஸ்பூன் மிளகு தூள், தேன் கலந்து, சின்ன சின்ன உருண்டையாக வைத்து கொண்டால் போதும்.
இதிலிருந்து 1 உருண்டையை தினமும் 2 வேளை, 2 மாதம் சாப்பிட்டு வரும்போது, கருப்பையிலிருக்கும் நீர்க்கட்டிகள் கரைந்துவிடும். கர்ப்பப்பை தொற்றும் நீங்கிவிடும்.
கழற்சிக்காய் சூரணம்
இப்படி தனியாக தயாரிக்க முடியாதவர்கள், கழற்சிக்காய் சூரணம் என்று நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் பவுடரை பயன்படுத்தலாம்.. இதில், 5 ஐந்து கிராம் மட்டுமே எடத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை, மாலை என தொடர்ந்து 2 மாதம் குடித்துவரலாம். அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காயை தூள் செய்து, நீருடன் குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது போட்டுவந்தாலே, விரைவில் குணமாகிவிடும்.. அதேபோல, உடம்பில் வீக்கங்கள் இருந்தாலும், இந்த கழற்சிக்காய் இலைகள், விதைகளை விழுதுபோல அரைத்து பூசலாம்..
விளக்கெண்ணெய் சூரணம்
ஆண்களுக்கு விரைவாதம் பிரச்சனை ஏற்பட்டால், இந்த கழற்சிக்காய் சூரணத்தை பயன்படுத்தலாம். இதற்கு விளக்கெண்ணெயில் கழற்சிக்காய் சூரணத்தை சேர்த்து காய்ச்சி வடிகட்டி, அதனை விரைவீக்கமுள்ள இடத்தில் மருந்தாக தடவினால் நிவாரணம் கிடைக்குமாம். அல்லது கழற்சிக்காய் பருப்புகளை லேசாக வறுத்து பவுடர் செய்து, சிட்டிகை அளவி வெதுவெது நீரில் கலந்து குடித்து வந்தாலும் விரைவாதம் நீங்குமாம். விதைப்பை வலியும் குறையும்.
இன்னும் ஏராள மருத்துவ குணங்களை கொண்ட கழற்சிக்காயை, மருத்துவரின் முறையான ஆலோசனையின் பேரில் மருந்தாக எடுத்துக் கொள்வது சிறந்த ஆரோக்கியம்.












Click it and Unblock the Notifications