மூட்டு வலி..வயிறு வலியா? கவலை வேண்டாம்..நொச்சி இலை இருக்கு..பாட்டி சொல்லும் வைத்தியம்
சென்னை: சாதாரண தலைவலி, காய்ச்சல் என்றாலே இன்றைக்கு பலரும் மருத்துவமனைகளுக்கு ஓடுகின்றனர். நம்முடைய முன்னோர்கள், பாட்டிகள் கை வைத்தியம் அதிகம் சொல்வார்கள். தலைவலிக்கு ஆவி பிடிப்பதில் இருந்து துளசி கசாயம் வரை போட்டு கொடுப்பார்கள். நொச்சி இலைகள் கை கண்ட மருந்தாகும். நாம் அன்றாடம் பார்க்கும் நொச்சி இலைகளில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கிறதா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
சாலை ஓரங்களிலும் முட்புதர்களிலும் காணப்படும் நொச்சி இலைகள் அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. நொச்சி செடியின் இலைகள் வேர், பட்டை, மலர்கள், கனி,விதை என முழு தாவரமும் பயன்படுகிறது. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் போது நொச்சி தழைகளை உடன் வைத்து பூச்சிகள் வராமல் பாதுகாப்பாக வைப்பார்கள்.

நொச்சி புதர்ச்செடியாகவும், மரமாகவும் வளரக்கூடியது. நொச்சியில் பலவகை உள்ளது. வெண் நொச்சி, கரு நொச்சி, நீர் நொச்சி ஆகும். கருநொச்சி சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நொச்சியின் வேர்ப்பகுதிக்கு பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. நொச்சி தரும் பயன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
நொச்சி இலைகள் பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல் பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளிக்கலாம். சில காய்ந்த இலைகளை எரித்து புகையை சுவாசிக்க தலைவலி மற்றும் சளி அடைப்பை போக்கும்.
இலையை இடித்து சாறு எடுத்து நாள்பட்ட புண்களுக்கு மருந்தாக தடவலாம். சீழ் வடிவது நிற்கும். நொச்சி செடியின் வேரானது சளிகளை அகற்றும் தன்மை கொண்டவை. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல் திறன் கொண்டது. நொச்சி மலர்கள் குளிர்ச்சியான தன்மை கொண்டவை. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. விதைகளுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை. தோல் வியாதி, பெரு வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கனிகள், நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. கிருமி நாசினியாக செயல்படுகின்றன. மாத விடாய் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்றி, கண் நோய், வீக்கங்கள், வெண் குஷ்டம் கணைய வீக்கம் ஆகியவற்றினை போக்கக்கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
இந்த தாவரத்தில் இருந்து லைனோலிக், ஒலியிக்,பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோடின், வைட்டமின் சி ஈரிடாய்டு, குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, சிண்டாசைடு போன்ற செயல்திறன் வேதிப்பொருட்கள் உள்ளன.
நீர் நொச்சியானது பாக்டீரியா எதிர்ப்பு, மூட்டுவலி எதிர்ப்பு, குடல்புழுக்கள் எதிர்ப்பு சக்திகள் இலைகளுக்கு உண்டு. முடிவளர்வதற்கு பயன்படுகிறது. மூச்சுக்குழல் அழற்சி, விட்டு விட்டு வரும் காய்ச்சல், வெண் குஷ்டம், ஆகியவற்றினை குணப்படுத்த உதவுகிறது. ஞாபகசக்தியை மேம்படுத்தவும் பயன்படும். சுளுக்கு, வீக்கம், மூட்டுவலி ஆகியவற்றிற்கு வெளி பூச்சாக உதவும்.
வேர் வாந்தியினை தடுக்கும். மார்பு சளியை அகற்றும். நீர் தாகத்தை போக்கும். கனிகள் நீர்க்கோவை, மாதவிடாய் கோளாறு ஆகியவற்றினை போக்க வல்லவை, நரம்பு வலுவேற்றியாகவும் செயல்படுகிறது. இது சித்த மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications