நெஞ்சு வலிக்குதா.. "இந்த" உயிர் காக்கும் மருந்துகளை உட்கொள்ளுங்கள்.. உயிரிழப்பை தடுக்கலாம்!
சென்னை: ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு நெஞ்சு வலி ஏற்பட்டால் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு நெஞ்சு வலி வரும் போது லோடிங் டோஸ் மாத்திரைகளாக ஆஸ்பிரின் (ASPIRIN) - 300 மில்லிகிராம், க்ளோபிடோக்ரெல் (CLOPIDOGREL) - 300 மில்லிகிராம், அடோர்வாஸ்டாட்டின் (ATORVASTATIN) - 80 மில்லிகிராம் ஆகிய மாத்திரைகளை ஒன்றாக உட்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய மாத்திரைகளே லோடிங் டோஸ் ஆகும். ஆஸ்பிரினும் க்ளோபிடோக்ரெலும் ரத்த தட்டணுக்களை ஒன்றிணைந்து ரத்தக் கட்டியை மேலும் வளர விடாமல் தடுக்கின்றன. அடோர்வாஸ்டாட்டின் மாத்திரையானது பிளவுற்ற ரத்த நாளத்தை மேலும் பிளவுறாமல் அதன் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கிறது. இவையன்றி வேறு மாத்திரைகளை லோடிங் டோஸாக பாவிக்க வேண்டாம்.
குறிப்பாக "ஐசோ சார்பைடு டை நைட்ரேட்" எனும் மாத்திரையை லோடிங் டோஸாக இது போன்ற நேரங்களில் உபயோகிக்குமாறு தகவல்கள் வெளிவருகின்றன. அது ஆபத்தில் முடியலாம். காரணம் நைட்ரேட் வகை மருந்துகள் இதயத்தின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதுடன் உடலில் உள்ள சிரைகளை விரவடையச் செய்கின்றன. இதன் மூலம் இதயத்தை நோக்கி அதிக ரத்தம் வருவதை தடுக்கின்றன.
மேலும் இவ்வாறு சிரைகளை விரிவடையச் செய்வதால் ரத்த அழுத்தம் வெகுவாகக் குறையும். மாரடைப்புகளில் இதயத்தின் கீழ்ப்புற சுவர் தசைகளுக்கு (INFERIOR WALL MYOCARDIAL INFARCTION) ஊட்டமளிக்கும் தமனியில் அடைப்பு ஏற்பட்டால் இதயத்தின் வலப்பக்க வெண்ட்ரிகிள் அடங்கிய தசைகள் செயல்திறன் குன்றும். இதனால் ஏற்கனவே ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் குறைவாக இருக்கும்.
இந்த நிலையில் நைட்ரேட் மாத்திரை உட்கொள்ளப்பட்டால் மேலும் ரத்த அழுத்தம் குறைந்து அது இதயத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நைட்ரேடஸ் வகை மருந்துகளை ஐசியூ வசதி உள்ள இடங்களில் மருத்துவரின் கண்காணிப்பில் ஏற்பட்டிருப்பது எந்த வகையான மாரடைப்பு என்பதை அறிந்து வழங்குவதே சரி. மேலும் ஆணுறுப்பு விரைப்புத்தன்மைக்காகவும் / நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்த நோயிலும் ( PULMONARY ARTERIAL HYPERTENSION) உட்கொள்ளப்படும் சில்டினாஃபில்/ டடலாஃபில் உள்ளிட்ட மருந்துகள் உட்கொள்வோர் நைட்ரேட் மாத்திரைகளை உட்கொண்டால் அபாயகரமான தாழ் ரத்த அழுத்தநிலை ஏற்படும்.
இதய ரத்த நாள அடைப்புக்கு லோடிங் டோஸ்
ஆஸ்பிரின் 300mg
+
க்ளோபிடோக்ரெல் 300mg
+
அடோர்வாஸ்டாட்டின் 80mg இவையே போதுமானது.
மேலும் இந்த மாத்திரைகளை உட்கொண்டு விட்டதால் முழு நிவாரணமும் கிடைத்து விடும் என்ற தவறான நம்பிக்கையில் வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. மேற்சொன்ன மாத்திரைகள் நாம் மருத்துவமனைகளை அடையும் முக்கியமான நேரத்தை நமக்கு வழங்கக் கூடியவையாக இருக்குமேயன்றி இந்த மாத்திரைகள் முழு சிகிச்சையன்று. இந்த மாத்திரைகளை உட்கொண்டு உடனே மருத்துவமனையை அடைந்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications