நல்லா இருந்தாரே! நடிகர் மாரிமுத்து மரணம்! ஆரோக்கியமாக இருந்தாலும் மாரடைப்பு வர உண்மையில் என்ன காரணம்
சென்னை: நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், ஆரோக்கியமான நிலையில் இருப்போருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகர் மாரிமுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56.. நல்ல உடல்நிலையில் இருந்த போதிலும், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

காலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு என்பது பலருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு: இப்போது நல்ல உடல்நிலையில் இருப்போருக்கும் இளம் வயதினருக்கும் கூட இதுபோல மாரடைப்பு ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. கடந்த சில காலத்திற்கு முன்பு, நாட்டில் பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிப்போர் இளம் வயதினரும் கூட மாரடைப்பால் உயிரிழந்த பல செய்திகளை நாம் படித்திருந்தோம். அதிலும் கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது. இது குறித்துப் பல ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.
முன்பெல்லாம் மாரடைப்பு என்பது வயதானோருக்கும் இணை நோய் இருப்போருக்கும் மட்டுமே ஏற்படும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறி அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுகிறது. பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கும் கூட மாரடைப்பு ஏற்படும் நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். மாறி வரும் வாழ்க்கை முறையே இதுபோல மாரடைப்பு திடீர் திடீரென ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
உணவுப் பழக்கம்: ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் முறை அதிகரித்துள்ள நிலையில், அதுவே மனிதர்களுக்கு எமனாக மாறுகிறது. இத்துடன் மன அழுத்தம், தூக்கமின்மை, புகைபிடித்தல், குடிப்பழக்கம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உடல் பருமன் ஆகியவையும் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
நவீன வாழ்க்கை முறை என்பது நமது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்து இருக்கிறது. இருப்பினும், உணவு முறை, அதிகரித்த மன அழுத்தம் காரணமாகப் பல உடல்நிலை பாதிப்புகளும் ஏற்படுகிறது. மேலும், புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கும் மாரடைப்பு ஏற்படக் காரணமாக இருக்கிறது.
உயர் ரத்த அழுத்தம்: இளைஞர்களிடையே பரவலாக இருக்கும் உடல் பருமன் தான் மாரடைப்பு ஏற்பட இப்போது முக்கிய காரணமாக மாறியுள்ளது. அதிக உடல் எடை என்பது இதயத்தில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் எனப் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாகத் தொப்பை இருப்பதும் கூட மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நாம் உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
போட்டிகள் அதிகரித்துள்ள இந்த காலத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள். இது கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை தூண்டுகிறது. இவை இதய குழாய்களைச் சேதப்படுத்தி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும், மன அழுத்தத்தைப் போக்கப் பலரும் ஆரோக்கியமற்ற பழக்கங்களை நோக்கிச் செல்கிறார்கள். அவை மாரடைப்பு அபாயத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. இதன் காரணமாக மன அழுத்தத்தைப் போக்க யோகா, தியானம் உள்ளிட்டவற்றை நாம் கடைப்பிடிக்கலாம்.
சிரமம்: நெஞ்சு பகுதியில் வலி அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் அது இதயத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதையே காட்டுகிறது. இதனால் உடனடியாக நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டும். மேலும், இந்த காலத்தில் மாரடைப்பு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், 40 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதய பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோல இணை நோய் உள்ளவர்களுக்கு 30 வயதுக்கு மேல் இந்த சோதனையைச் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications