இந்தியாவின் நிலைமை ரொம்ப மோசம்! "ஆண்மை குறைவு" இளைஞர்களிடையே அதிகரிக்கும் பேராபத்து! தடுப்பது எப்படி
சென்னை: இளம் தலைமுறையினர் குறிப்பாக இளைஞர்கள் இந்த காலத்தில் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாக ஆண்மைக் குறைவு இருக்கிறது. இந்த ஆண்மைக் குறைவு எதனால் ஏற்படுகிறது. இந்தியாவில் எந்தளவுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது.. இதற்குத் தீர்வு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பது தான் உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் மேஜர் பிரச்சினையாக இருந்தது. இதைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன.

மக்கள் தொகை:
குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் தொகை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். மக்கள் தொகையை அதிகரிக்க உலக நாடுகள் முயன்று வருகிறது. மக்கள் தொகை சரிவு பெரும் பிரச்சினையாக மாறிவிட்டது. இதில் இந்தியாவும் விதிவிலக்கு இல்லை.
மக்கள் தொகை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ள நிலையில், அதில் ஆண்மைக் குறைவு பிரச்சினையும் முக்கியமானதாக இருக்கிறது. இதனால் நமது நாட்டின் கருவுறுதல் விகிதம் கடுமையாகச் சரிந்து வருகிறது. 1960களில், இந்தியாவில் கருவுறுதல் விகிதம் 5.92 ஆக இருந்தது. அதாவது, சராசரியாக ஒரு பெண் சுமார் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
ஆண்களிடையே சிக்கல்:
ஆனால், இன்று நம் நிலைமையைப் பார்த்தால் அது மோசமாகவே உள்ளது. கருவுறுதல் விகிதத்தில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. 2023இல் எடுக்கப்பட்ட ஆய்வில் கருவுறுதல் விகிதம் 2ஆக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாம் தற்போதுள்ள மக்கள் தொகையைத் தக்கவைத்துக் கொள்ளத் தேவையான 2.1ஐ விட சுற்றுக் குறைவாகும். இருப்பினும், வரும் காலத்தில் இது மிகப் பெரிய சிக்கலாக மாறும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
கருவுறுதல் விகிதம் சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவில் இளம் தம்பதிகளிடையே கருவுறுதல் விகிதம் கடுமையாகச் சரிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக ஆண்களிடையே தான் இந்த பிரச்சினை அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மோசம்:
சுமார் ஓராண்டு உடலுறவு கொண்ட பிறகும் ஒரு பெண்ணை கர்ப்பமாக முடியவில்லை என்றால் அதை ஆண்மைக் குறைவு (Male infertility) என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. சர்வதேச அளவில் இது 15%ஆக உள்ள சூழலில், இந்தியாவில் மட்டும் இது சுமார் 40-50 சதவீதமாக இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை நாம் மருத்துவர்களிடம் கேட்கும் போது அவர்கள் பல விஷயங்களைப் பட்டியலிடுகிறார்கள். ஆனால், எல்லாருமே சொல்ல வரும் காரணம் ஒன்று தான்.. அதுதான் வாழ்க்கை முறை மாற்றம்.
காரணங்கள்:
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "நமது வாழ்க்கைத் தரம் சுற்றுச்சூழல் காரணிகளால் பாதிக்கப்படுகிறது: மாசு, பூச்சிக்கொல்லிகள், உணவுக் கலப்படம், நாம் சுவாசிக்கும் காற்று ஆகியவை கூட இதில் பங்களிக்கின்றன. மன அழுத்தம், மோசமான உணவு மறை, தூக்கமின்மை போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் நமக்கு ஆபத்தாக மாறுகிறது.
இப்போது பெரும்பாலானோர் தூங்காமல் நைட் ஷிப்ட்டில் வேலை செய்ய வேண்டி உள்ளது. இதுவும் அவர்களது உடலை பாதிக்கிறது. இது தவிர உடல் பருமன், மோசமான உணவு முறைகள் மற்றும் புகைபிடித்தல், குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை கூட ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் அபாயத்தைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், முன்பு போல இல்லாமல் இப்போது திருமணத்தையும் கூட தள்ளிப்போடுகிறார்கள். இதுவும் கூட குழந்தையின்மைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது" என்கிறார்கள்.
என்ன செய்யலாம்:
ஆண்கள் விந்துணிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியது ரொம்பவே முக்கியம். லேட் நைட் தூக்கத்தைத் தவிர்த்துவிட்டு. சீக்கிரம் தூங்குங்கள் அல்லது எப்போதும் ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள். துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு உடலுக்கு நல்ல உணவைச் சாப்பிடுங்கள். உடலை ஆக்டிவாக வைத்திருக்க உடற்பயிற்சி, ஜாக்கிங்- வாக்கிங் செய்யுங்கள். எல்லாவற்றையும் விட மேலாகத் தேவையில்லாமல் பதற்றப்பட்டு மன அழுத்தத்தை வாங்கிக்கொள்ளாதீர்கள். கூலாகவும் ரிலாக்ஸாகவும் இருங்கள்.
இது சாதாரண செய்தி மட்டுமே. இதை நிச்சயம் யாரும் மருத்துவ ஆலோசனையாகக் கருதக்கூடாது. உங்கள் உடலில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications