ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தவர்-மத்திய பாஜக அரசுக்கு சிம்மசொப்பனம் நீதிபதி கே.எம். ஜோசப் இன்று ஓய்வு
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு நீதித்துறையில் சிம்மசொப்பனமாக விளங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் இன்று பணி ஓய்வு பெறுகிறார். உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது, அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியதையே ரத்து செய்தவர் என்ற நீதித்துறையின் சரித்திரப் பக்கத்தில் இடம் பிடித்தவர் நீதிபதி கே.எம். ஜோசப்.
2018-ம் ஆண்டு முதல் நீதிபதி கே.எம்.ஜோசப் என்கிற பெயர் மத்திய பாஜக அரசுக்கு ஒவ்வாமையானதாகத்தான் இருந்து வருகிறது. 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் கூத்துகளுக்கு கடிவாளம் போட்டதில் இருந்தே நீதிபதி கே.எம். ஜோசப் பெயர் பேசுபொருளாக இருக்கிறது.

உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நீதிபதி கே.எம். ஜோசப் வழங்கிய சில வழக்குகளின் உத்தரவுகள்:
உத்தரகாண்ட் விவகாரம்: 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸின் ஹரீஷ் ராவ் அரசு நடைபெற்று வந்தது. இந்த அரசுக்கு எதிராக 9 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி பாஜகவில் இணைந்தனர். இந்த 9 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே அவரது ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டார் உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கே.எம். ஜோசப். அத்துடன் ஒரு மாநில சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே, ஆட்சி கலைப்பது என்பது ஜனநாயகத்தின் வேரையே வெட்டி சாய்ப்பது என மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார் நீதிபதி கே.எம். ஜோசப். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தோல்வியைத் தழுவியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஹரீஷ் ராவத், பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் முதல்வரானார்.
உச்சநீதிமன்ற நீதிபதி: உத்தரகாண்ட் விவகாரம் முடிவடைந்த கையோடு நீதிபதி கே.எம். ஜோசப், உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலீஜியத்தால் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் மத்திய அரசு நீதிபதி கே.எம். ஜோசப் பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மத்திய அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவ்யேற்றது முதல் பல்வேறு முக்கிய வழக்குகளில் மத்திய அரசை கடுமையாக சாடியவர் நீதிபதி கே.எம்.ஜோசப்.
தலைமை தேர்தல் ஆணையர்: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்கள் நியமனத்துக்கு தனி அமைப்பு ஒன்று தேவை என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு தன்னிச்சையாக நியமிக்க முடியாது; பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுதான் தலைமை தேர்தல் ஆணையர், இதர தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை பிறப்பித்தது நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்.
வெறுப்பு பேச்சு விவகாரம்: வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளை விசாரித்தது நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான பெஞ்ச். இந்த விசாரணையின் போது வெறுப்பு பேச்சு என்பது ஒரு கடுமையான குற்றம். வெறுப்பு பேச்சுகள் குறித்து புகார் வரவிட்டாலும் கூட அந்தந்த மாநில அரசுகள் வழக்குகளை தாமாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும். அப்படி வழக்குகளைப் பதிவு செய்வது தாமதமானால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என உத்தரவிடப்பட்டது. மேலும் அரசியலில் மதத்தைப் பயன்படுத்தாமல் இருந்தாலே வெறுப்பு பேச்சுகள் குறையும் எனவும் சுட்டிக் காட்டினார் நீதிபதி கே.எம். ஜோசப்.
ஜல்லிக்கட்டு: ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்குகளில் அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த தடை இல்லை என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச்.
குஜராத் பில்கிஸ் பானு வழக்கு: 2002-ல் குஜராத் மாநிலத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு எதிரான வழக்கு விசாரணையின் போது மத்திய பாஜக அரசு, குஜராத் பாஜக அரசை கடுமையாக சாடினார் நீதிபதி கே.எம். ஜோசப். மேலும் தாம் பணி ஓய்வு பெறும் வரை இவ்வழக்கை இழுத்தடிக்கலாம்- இவ்வழக்கை நான் விசாரிக்க கூடாது என நினைக்கிறீர்களா? என பகிரங்கமாக நீதிமன்றத்தில் கேட்டார் நீதிபதி கே.எம். ஜோசப். மேலும் இன்று பில்கிஸ் பானு பாதிக்கப்பட்டுள்ளார்; நாளை நீங்களாகவோ நானாகவோ பாதிக்கப்படலாம் என நீதிபதி கே.எம். ஜோசப் தெரிவித்த கருத்து பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றது.
இந்து மதம்: இந்தியாவில் பழமையான பெயர்கள் படையெடுப்புகளால் மாற்றப்பட்டதை திருத்த வேண்டும் என்பது தொடர்பான ஒரு பொதுநலன் வழக்கு. இதனை விசாரித்த நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான பெஞ்ச், இந்தியா மதச்சார்பற்ற தேசம். இந்தியா கொந்தளிப்பாகவே இருக்க வேண்டும் என்பதா மனுதாரர் விருப்பம்? நான் ஒரு கிறிஸ்தவன். இந்து மதத்தை சரிசமமாகவே பார்க்கிறேன். இந்துமதத்தின் சிறப்புகளை புரிந்து கொள்ளுங்கள். வாழ்வியல் தத்துவம்தான் இந்துமதம் என குட்டு வைத்தது.












Click it and Unblock the Notifications