மெட்ராஸ் ஐ.ஐ.டியின் அசத்தல் ரோபோக்கள்! கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்வதற்கு முடிவுரை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) ரோபோவான 'ஹோமோசெப்' (HomoSEP), இந்தியாவில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக இக்கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு தற்போது களப் பணிக்குத் முழுமையாகத் தயார்நிலையில் உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 10 இயந்திரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களைக் கண்டறிவது தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

 HomoSEP: IIT-Madras robot to clean septic tanks, ready for field deployment

ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள சென்டர் ஃபார் நான் டிஸ்ட்ரக்டிவ் எவாலுவேஷனைச் (Centre for Nondestructive Evaluation) சேர்ந்த பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியர், ஐஐடி மெட்ராஸ் ஆதரவுடன் இயங்கி வரும் தொடக்க நிறுவனமான சொலினாஸ் இண்டக்ரிட்டி பிரைவேட் லிமிடெட் (Solinas Integrity Private Limited) ஆகியோரைக் கொண்ட குழுவினர் பல ஆண்டுகளாகப் பணியாற்றி இந்த ரோபோவை உருவாக்கி உள்ளனர். தூய்மைப் பணியாளர்கள், இந்தியாவில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிக்கப் பாடுபட்டுவரும் சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் (Safai Karamchari Andolan-SKA) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆகியோருடன் இக்குழுவினர் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றனர்.

தூய்மைப் பணியின்போது நிகழ்ந்த துயர சம்பவத்தில் கணவர்களைப் பறிகொடுத்த திருமதி நாகம்மா, திருமதி ருத் மேரி ஆகியோரின் தலைமையில் இயங்கி வரும் சுயஉதவிக் குழுக்களுக்கு, சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் (SKA) தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முதல் இரண்டு ஹோமோசெப் (HomoSEP) இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மனிதக் கழிவுகளை அகற்றும்போது ஏற்படும் பாதிப்புகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்ட இதுபோன்ற சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி அவைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்படுத்துவது ஐஐடி மெட்ராஸ்-ன் தனித்துவமான முன்னோடி மாதிரியாகும். மேலும் 9 இயந்திரங்களை விநியோகிப்பதற்கான பணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் முதன்மைத் திட்ட ஆய்வாளரும், ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் ஆசிரியருமான பேராசிரியர் பிரபு ராஜகோபால், ஹோமோசெப்-ஐ உருவாக்குவதன் பின்னணியில் உள்ள உந்துதல்களை விளக்கினார். அவர் கூறும்போது,"பாதியளவு திடமாகவும், பாதியளவு திரவமாகவும் மனித மலத்துடன் உள்ள கழிவுநீர்த் தொட்டி மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு நிறைந்திருக்கும் போது நச்சு நிறைந்த சூழலைக் கொண்டிருக்கும். மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறைக்கு தடைகளும், தடை உத்தரவுகளும் அமலில் இருந்த போதிலும், இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

பேரா. பிரபு ராஜகோபால் மேலும் பேசுகையில், "ஹோமோசெப் திட்டம் தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் அவசரமான, அவசியமான ஒரு சமூகப் பிரச்சனைக்கு தீர்வு காண பல்கலைக் கழகம் (எங்கள் குழு), தன்னார்வத் தொண்டு நிறுவனம், தொழில்துறை கூட்டாண்மை சமூகப் பொறுப்பு, தொடக்க நிலை நிறுவனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து உள்ளன. பெரிய அளவிலான சிக்கலான பிரச்சனை என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இதற்கான உந்துதலில் மற்றவர்களுடன் இணைய எங்கள் முயற்சி ஒரு உத்வேகமாக இருக்கும் என நம்புகிறோம்" என்றார்.

இது தொடர்பாகத் தொடர்ந்து பேசிய பேரா. பிரபு ராஜகோபால், "பல ஆண்டுகளாக இத்திட்டத்தில் தீவிர ஆர்வமுடன் பணியாற்றிய திவான்ஷு, பாவேஷ் நாராயணி (ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர், தற்போது சொலினாஸ்-லும் உள்ளார்) உள்ளிட்ட ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு உள்ளோம். நீர் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி வரும் தொடக்க நிறுவனமான சொலினாஸ்-ன் சுறுசுறுப்பான குழுவினர் எங்களோடு இடம்பெற்றுள்ளனர். பெருநிறுவன சமூகப் பொறுப்பு மூலம் கிடைத்துவரும் ஆதரவும் எங்களின் வளர்ச்சிக்கும், எங்கள் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் உறுதுணையாக இருந்து வருகிறது. இந்த ரோபோக்களை ஒட்டுமொத்தமாகத் தயாரித்து நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் விநியோகிக்க அரசுத் தரப்பில் இருந்து அடுத்த ஆண்டு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்." எனத் தெரிவித்தார்.

பேரா. ராஜகோபால் வழிகாட்டுதலில் திரு. திவான்ஷு குமாருக்கு முதுகலை இறுதியாண்டுக்கான ஆய்வுத் திட்டமாக உருவாக்கப்பட்டதுதான் ஹோமோசெப். 'கார்பன் ஜீரோ சாலன்ஞ்-2019' போட்டியில் இடம்பெற்று பின்னர் ஐஐடி மெட்ராஸ்-ன் சமூகம் தொடர்புடைய திட்ட முன்முயற்சிக்கான நிதியுதவியும் பெறப்பட்டது. அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் தொற்றுநோய்- தொடர்பான கடினமான சூழல் நிலவியபோதும், ஹோமோசெப் திட்டத்தை மேலும் மேம்படுத்த ஐஐடி-மெட்ராஸ் ஆதரவுடன் இயங்கி வரும் சொலினாஸ் இண்டக்ரிட்டி பிரைவேட் லிமிடெட் (திரு. திவான்ஷு தற்போது தலைமை வகித்து வருகிறார்) தொடக்கநிலை நிறுவனத்துடன் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பணியாற்றி வந்தனர்.

இந்த முன்மாதிரித் திட்டத்திற்காக சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தொடக்கம் முதலே ஆதரவை வழங்கி வருகின்றன. தொடக்கத்தில் முன்வடிவ (prototype) மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டபோது 2019ம் ஆண்டில் விண் பவுண்டேஷனும் (WIN Foundation), 2019-20ம் ஆண்டுகளில் இந்த தயாரிப்பை மேம்படுத்தும் பணிக்கு கெயில் (இந்தியா) நிறுவனமும், ரோபோவின் குறும்படிவாக்கம் மற்றும் பெயர்வுத் திறனுக்காக (miniaturization and portability) கேப்ஜெமினி நிறுவனமும் தங்கள் சமூகப் பொறுப்பு நிதி மூலமாக ஆதரவு அளித்துள்ளன. கடந்த ஆண்டில் இருந்து என்.எஸ்.இ. பவுண்டேஷன் (NSE Foundation) மூலம் 8 ஹோமோசெப் ரோபோக்களையும், எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் (L&T Technology Services Foundation) மூலம் 2 ஹோமோசெப் ரோபோக்களையும் சமூகப் பொறுப்பு நிதி மூலம் உருவாக்கி விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

ஹோமோசெப் ரோபோவில் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட ரோட்டரி பிளேடு மெக்கானிசம் (blade mechanism) மூலம் கழிவுநீர்த் தொட்டியில் உள்ள கடினமான கசடுகளையும் ஒன்றுசேர்த்து, உறிஞ்சும் மெக்கானிசம் (suction mechanism) மூலம் தொட்டியில் உள்ள கழிவுகளை பம்ப் செய்யலாம். உரிய பயிற்சி மற்றும் தகுந்த வழிகாட்டுதல் ஆகியவற்றுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் தாங்களே ஹோமோசெப் ரோபோவை இயக்க முடியும். இதற்கான பணிகளை தற்போது எங்கள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஹோமோசெப்-ன் வடிவமைப்பு தொடங்கி ஒட்டுமொத்த நடைமுறைகள் அனைத்திலும் 'பாதுகாப்பு' அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தொடக்கநிலை பங்குதாரரான சொலினாஸ் இண்டக்ரிட்டி-யின் தயாரிப்புத் தலைமை (Product Lead) திரு.பாவேஷ் நாராயணி கூறியதாவது: "ஆய்வகத் தயாரிப்பில் இருந்து உண்மையான கழிவுநீர்த் தொட்டியில் ஈடுபடுத்தக் கூடிய ஒரு ரோபோ தயாரிப்பாக மாற்றித் தருவதற்கான பாதை சிரமங்கள் நிறைந்ததாகும். தூய்மைப் பணியாளர்களின் (சஃபாய் கர்மசாரி) பாதுகாப்பை மனதில் கொண்டு தீர்வை வடிவமைக்க எங்கள் குழுவினர் பல நாட்கள் இரவுபகலாக அயராது உழைத்தனர். பொறியாளர்கள், உலோகப் புனைவாளர்கள் (fabricators), தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு காரணமாக இந்த மைல்கல்லை எங்களால் எட்ட முடிந்துள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமர்வுகளை நடத்தி ஹோமோசெப் ரோபோ-வின் செயல்பாடுகள் மற்றும் இயக்கும் முறைகள் குறித்து எங்கள் குழுவினர் விளக்குகின்றனர். ஹோமோசெப் உருவாக்கப்பட்டதால் அவர்களின் முகங்களில் காணப்படும் மகிழ்ச்சி, எங்களை ஊக்கத்துடன் பணியாற்றவும், அதிகளவில் விநியோகிக்கவும் உறுதுணையாக இருக்கும். ஒன்றிணைந்து பணியாற்றினால், கழிவுநீர்த் தொட்டிகளில் இருந்து மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை முற்றிலும் ஒழித்துவிடமுடியும்."

திரு. பாவேஷ் நாராயணி மேலும் தெரிவித்ததாவது: "இந்த கருத்தாக்க மாதிரியின் மூலம் குறிப்பிடத்தக்க சில கண்டுபிடிப்புகளை எங்கள் கூட்டுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். விரிவான உருவகப்படுத்துதல் மூலம் பிளேடு வடிவமைப்பை மேம்படுத்தி பரிசோதித்துப் பார்த்தோம். எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் குறும்படிவாக்கம் செய்வதிலும் வெற்றிகண்டோம். தொலைதூர இடங்களுக்கும் எங்கள் தயாரிப்பை எடுத்துச் செல்லும் வகையில் டிராக்டருடன் ஒருங்கிணைத்து இருக்கிறோம்."

இந்த நிகழ்வில் ஐஐடி மெட்ராஸ், இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட் (Office of Institutional Advancement) அலுவலகத்தின் முன்னாள் மாணவர் மற்றும் பெருநிறுவன உறவுகளுக்கான துணைத் தலைவர் நந்தினி தாஸ்குப்தா பேசுகையில், "ஹோமோசெப்-ஐ உருவாக்கிய பேராசிரியர் பிரபு மற்றும் சொலினாஸ் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான வறுமை, பாகுபாடு ஆகியவை காரணமாக மனிதாபிமானமற்ற மற்றும் ஆபத்தான சூழலில் பணிபுரிந்து வரும் மக்களுக்கு இந்த முயற்சி கண்ணியத்தை மீட்டெடுத்து உள்ளது. இதற்கு ஆதரவை நல்கிவரும் நன்கொடையாளர்களுக்கு நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம். சமூகப் பொறுப்பு நிதி கூட்டு முயற்சிக்கு இந்தத் திட்டம் சிறந்ததொரு உதாரணமாகத் திகழ்கிறது. நன்கொடையாளர்கள் மூலம் பெறப்படும் ஆதரவு ஐஐடி மெட்ராஸ்-ன் சுற்றுச்சூழலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் (SKA) தேசிய மையக்குழு உறுப்பினரான டாக்டர் தீப்தி சுகுமார் கூறும்போது, "எஸ்.கே.ஏ. எனப்படும் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறைக்கு எதிரான எங்கள் அமைப்பு, அனைத்து விதமான கழிவுநீர்ப் பணிகளையும் இயந்திர மயமாக்க வேண்டும் என தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட ஒருவரின் மனைவியான நாகம்மா என்ற விதவைப் பெண்ணை 'இயந்திரம் மூலம் கழிவுநீர் அகற்றும் சேவை' அளிக்கும் தொழில் முனைவோராகவும், உரிமையாளராகவும் ஆக்கியதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்து வந்தவர்கள், மனிதக் கழிவுகளை அகற்றும்போது உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு 'சஃபாய் கர்மசாரி எண்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தை எஸ்.கே.ஏ.வின் ஆதரவுடன் நாகம்மா தொடங்கியுள்ளார். சஃபாய் கர்மசாரி சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி கண்ணியமாக வாழ்க்கை நடத்த இந்நிறுவனம் உதவிகரமாக இருக்கும். மனிதக் கழிவுகளை அகற்றுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் தூய்மைப் பணிகளை இயந்திரமயமாக்கும் தீர்வுகளை ஏற்படுத்தவும், ஐஐடி மெட்ராஸ் குழுவினரின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் ஆதரவைப் பெறவும் இந்த நிறுவனம் கவனம் செலுத்தும்" என்றார்.

என்.எஸ்.இ. பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் ரேமா மோகன் அவர்கள் தெரிவித்ததாவது: "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறை நீடித்து வருவதால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டன. இந்தத் துயரமான பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் எங்கள் என்.எஸ்.இ. பவுண்டேஷன் ஆர்வத்துடன் உள்ளது. ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் பிரபு ராஜகோபால் அவர்களின் குழுவுக்கு ஆதரவு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவர்கள் பல ஆண்டுகளாக இதன் மேம்பாட்டுக்காகவும் உரிய பங்குதாரர்களை இணைக்கவும் பாடுபட்டிருக்கிறார்கள். என்.எஸ்.இ. பவுண்டேஷன் ஆதரவுடன் ஹோமோசெப் ரோபோக்களை பேரா. ராஜகோபால் குழுவினர் விநியோகிக்கத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். இந்த முயற்சி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உண்டு. முழுமையான கட்டமைப்பில் இதற்கான தீர்வை விரிவுபடுத்த இந்தக் குழுவினருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலுடன் உள்ளோம்."

கேப்ஜெமினி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதித் திட்டத் தலைவர் குமார் அனுராக் பிரதாப் கூறியதாவது: "கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யவும் அதன் மூலம் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிக்கவும் உருவாக்கப்பட்ட ஹோமோசெப் ரோபோ திட்டப் பணியில் ஐஐடி மெட்ராஸ் உடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றியதில் கேப்ஜெமினி மகிழ்ச்சி அடைகிறது. ஹோமோசெப் ரோபோக்களை விநியோக்கும் பணியில் ஐஐடி மெட்ராஸ்-ன் பேராசிரியர் பிரபு தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருப்பதை கேப்ஜெமினி-யின் சி.எஸ்.ஆர். குழுவினராகிய நாங்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறோம். சஃபாய் கர்மசாரி சமூகத்தினர் இந்தத் தீர்வை செயல்படுத்த எங்கள் வாழ்த்துகள். பேரா. பிரபு தலைமையிலான குழுவுடன் எதிர்காலத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றவும், அவர்களின் உருவாக்கும் தீர்வுகளை வலுப்படுத்தவும் விரும்புகிறோம்." இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+