வலிமை பெற்ற இந்திய கிரிக்கெட் அஸ்திவாரம் - வியக்க வைக்கும் டிராவிட் ஸ்டிராடஜி!
ஆஸ்திரேலியாவில் பட்டையைக் கிளப்பிய இந்திய அணியை, வரலாறு அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரில் அந்த அணியை வீழ்த்தி, தொடர்ந்து இருமுறை கப் ஜெயிப்பது என்பதெல்லாம் வேற லெவல்.
குறிப்பாக, இம்முறை முழு பலத்துடன் விளையாடிய ஆஸ்திரேலியாவை, இரண்டாம் நிலை அணியை வைத்துக் கொண்டு வீழ்த்தி கோப்பையை தட்டியதெல்லாம் 'உலகக் கோப்பையை' வென்றதை விட பெரிய சாதனை என்றால் மிகையாகாது.
இந்தியாவின் இந்த நம்பமுடியாத சாதனைக்கு 'சைலண்ட் பார்ட்னர்' யார் தெரியுமா?
ராகுல் டிராவிட். ஆம்! ஆஸி., தொடரில் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில், ப்ரித்வி ஷா ஆகியோர் நம்ம டிராவிட்டின் வளர்ப்பு.
U-19 கிரிக்கெட்டில் பொறுப்பு ஏற்ற பிறகு டிராவிட்டின் முதல் பேட்சில் ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் பயிற்சி பெற, அவரது இரண்டாவது பேட்சில் ஷுப்மன் கில், ப்ரித்வி ஷா ஆகியோர் பயிற்சிப் பெற்றனர்.
'இந்தியாவின் தடுப்புச் சுவர்' என்று அழைக்கப்படும் டிராவிட் இந்த வீரர்களிடையே விதைத்த பயிற்சியின் பலனை, இந்திய அணி இந்த ஆஸ்திரேலிய தொடரில் ஏகபோகமாக அறுவடை செய்திருக்கிறது.
இப்போது, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பரஸ் ஹாம்ப்ரே-வுடன் இணைந்து, தரமான வீரர்களை தேர்வு செய்ய பல புதிய அம்சங்களை நிறுவியுள்ளார் டிராவிட்.
உயர்-மட்ட தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு மண்டலத்திலும் U-19 அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர் குறித்த தகவலும் ஒவ்வொரு வாரமும் சேகரிக்கப்படும். அதேபோல், இந்திய 'A' வீரர்கள் குறித்த தகவலும் ஒவ்வொரு வாரமும் சேகரிக்கப்படும்.
ஒவ்வொரு வீரர்கள் குறித்தும் வாராவாரம் பெறப்படும் தகவல்கள் மூலம் அவர்களது ஆற்றல், டெக்னிக் மற்றும் உடல்தகுதி மேம்படுத்தப்படும். குறிப்பாக, ஒரு வீரர் ஒரு ஷாட்டை இந்த வாரம் எப்படி அடிக்கிறார்; இதே ஷாட்டை போன வாரம் எப்படி அடித்திருக்கிறார் என்பது வரை ஆராயப்படும். அந்த ஷாட் சென்ற தூரம், அவர் அடித்த திசை சரிதானா, எத்தனை முறை அவர் ஷாட் அடிக்க தவறினார், தனது டெக்னிக்கை மாற்றுகிறாரா என இன்ச் பை இன்ச்சாக பேட்ஸ்மேனின் ஒவ்வொரு தகவலும் அலசப்படுமாம்.
அடேங்கப்பா!!!
இந்திய 'ஏ' அணிக்காக விளையாடும் வீரர்கள் குறித்த 'Workload Management system' மற்றும் தரவுகள் சேகரித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும். புரியும்படி சொல்லவேண்டுமெனில், முன்பொருமுறை இந்திய ஏ அணிக்காக முகமது சிராஜ், மாயங் அகர்வால் நிலையாக விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு குறிப்பிட்ட இந்திய ஏ கிரிக்கெட் தொடருக்கு அவர்கள் அனுப்பப்படாமல், சில உள்ளூர் தொடர்களில் விளையாட அனுப்பப்பட்டனர்.
குறிப்பாக 2016-ல் தேர்வுக் குழுவில் ஏற்படுத்தப்பட்ட அதிரடி மாற்றமாக இந்த சம்பவத்தை உதாரணம் காட்டலாம். அப்போது, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இந்திய ஏ அணியில், 33 வயதான விக்கெட் கீப்பர் நமன் ஓஜா தயாராகிக் கொண்டிருக்க, டிராவிட் பொறுப்புக்கு வந்த பிறகு, உடனடியாக ஓஜா பயணம் ரத்து செய்யப்பட்டு, இளம் வீரர் சஞ்சு சாம்சன் அனுப்பப்பட்டார். அப்போதே தேர்வுக் குழுவில் ஒரு விஷயம் அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கப்பட்டது,
"இந்திய 'ஏ' அணி என்பது அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் இளம் வீரர்களின் இருப்பிடமாக இருக்க வேண்டும்" என்று.
முன்னாள் இந்திய தேர்வுக் குழு உறுப்பினர் தேவங் காந்தி கூறுகையில், "எங்கள் நோக்கம் என்னவெனில் சல்லடை போட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களை சிறப்பாக செயல்பட வைப்பது தான். டிராவிட் தனது ஐடியாவில் தெளிவாக இருக்கிறார் "என்றார்.
என்சிஏ, பிசிசிஐ எடுத்த நடவடிக்கைகளின் விளைவை நாம் ஆஸ்திரேலிய தொடரில் கண்கூடாக பார்த்தோம். என்சிஏ மற்றும் இந்திய 'ஏ' அணி சுற்றுப்பயணங்களுக்கான பட்ஜெட்டை இருமடங்கு அதிகரித்திருக்கிறது பிசிசிஐ. இந்திய அணிக்கு எப்போது தேவைபட்டாலும் தரமான திறமையான வீரர்களை அனுப்ப என்சிஏ தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதை ராகுல் டிராவிட் போட்டது!