கேதார்நாத் கோவிலில் இன்று முதல் பூஜை… ஹெலிகாப்டர் மூலம் கோவிலுக்கு போகும் அர்ச்சகர்கள்!
கேதார்நாத்: புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து 86 நாட்களுக்குப் பின்னர் கேதார்நாத் கோவிலில் இன்று முதல் பூஜைகள் தொடங்கியுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இமாலய சுனாமியால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள்.
பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவிலை சுற்றி அமைந்திருந்த ஹோட்டல்கள், கடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் கோவிலுக்குஎந்த வித சேதமும் ஏற்படவில்லை.
எனினும் சடலங்கள் குவிந்திருந்த காரணத்தினாலும், கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதாலும் பூஜைகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் கேதார்நாத் கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேதி முதல் திருப்பணிகள் தொடங்கின. மலைப்பாதை சீரமைக்கப்படாத காரணத்தால் ஹெலிகாப்டர் மூலமாக 24 அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிலில் தங்கி பணியாற்றுகின்றனர்.
86 நாட்களுக்குப்பிறகு இன்று முறைப்படி பூஜைகள் தொடங்கியுள்ளன. கேதர்நாத்-பத்ரிநாத் குழுவினரின் மேற்பார்வையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நான்கு மணிநேரம் பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாமி ஹன்ஸ்தேவாச்சாரிய சங்கராச்சாரியார் முன்னிலையில் பூஜைகள் நடைபெறுகின்றன. ‘இயற்கை பேரிடர் காரணமாக நீண்ட காலமாக பூஜைகள் நிறுத்தப்பட்டதற்காக சிவபெருமானிடம் மன்னிப்பு கோருவோம்' என்று அவர் கூறியுள்ளார்.
இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் பரிகார பூஜைகளில் உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுனா மற்றும் அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கேதர்நாத் கோவிலில் பூஜை தொடங்கினாலும் கோவிலுக்கு செல்லும் பாதை இன்னும் சரி செய்யப்படாததால், கேதர்நாத் கோவிலுக்கு, இப்போதைக்கு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications