2 முறை அல்ல 4 முறை தமிழரை தேடி வந்த பிரதமர் பதவி..பறிபோக காரணம் அமித்ஷா சொன்ன திமுகவா? உண்மை என்ன?
சென்னை: இந்திய திருநாட்டின் பிரதமராகும் வாய்ப்பு இருமுறை தமிழருக்கு கிடைத்தது; ஆனால் திமுகதான் அந்த வாய்ப்பை பறித்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் இன்று குற்றம்சாட்டி இருக்கிறார். இது இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
வேட்டிய கட்டிய தமிழன் பிரதமர் என்பது தமிழக அரசியலில் நீண்டகாலம் உச்சரிக்கப்படுவதுதான். உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்த ஆண்டான 1964-ல்தான் நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு காலமானார். அப்போது அகில இந்திய அளவில் செல்வாக்கு பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் மூத்தவராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதனால் இயல்பாகவே நேருவுக்குப் பின்னர் காமராஜர் பிரதமராகக் கூடிய வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் பெருந்தன்மைமிக்க காமராஜர், லால்பக்தூர் சாஸ்திரியை பிரதமராக்கினார். 1966-ல் அதாவது உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு 2 வயது இருக்கும் போது லால்பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்தார். அதனால் அப்போதும் அனைவரது கண்களும் காமராஜரை நோக்கித்தான் இருந்தன. அப்போதாவது காமராஜர் பிரதமர் பதவியை ஏற்பார் என அனைவரும் முடிவோடு காத்திருந்தனர். அப்போதுதான் காமராஜர் கிங்மேக்கர் என்பதை மீண்டும் நிரூபித்தார். நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்த தேசத்தின் பிரதமராக்கினார் காமராஜர். அப்போதுதான் நோ ஹிந்தி, நோ இங்கிலீஷ், தென் கவ்? என ஆங்கிலத்தில் காமராஜர் கேட்டது பெரும் பேசுபொருளாக இருந்தது.

திமுகவுக்கு என்ன தொடர்பாம்?: பிரதமர் பதவி காமராஜரை 2 முறை தேடி வந்த இந்த தருணங்களில் பிரதமர் பதவியை தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக திமுக இருக்கவே இல்லை. ஏனெனில் அப்போது காங்கிரஸ் தனிப்பெரும் பலத்துடன் 361 லோக்சபா எம்பிக்களைப் பெற்றிருந்தது. காமராஜர் பிரதமர் பதவியை தாமே நிராகரித்தார்; காமராஜர் பிரதமர் பதவியை தாமே லால்பகதூர் சாஸ்திரிக்கும் இந்திரா காந்தி அம்மையாருக்கும் கொடுத்தார்; இதனாலேயே இந்திய சரித்திரத்தில் கிங் மேக்கராக திகழ்கிறார் காமராஜர்.
எமர்ஜென்சி காலம்: சரி அடுத்து எப்போது பிரதமர் வாய்ப்பு தமிழருக்கு கிடைத்தது? இதற்கு ஆதாரங்கள் இல்லாதபோதும் செவிவழி செய்திகள், மூத்த பத்திரிகையாளர்கள் கருத்துகள் ஊடகங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இந்திரா அம்மையாருடன் காமராஜருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் இரண்டாக பிளவும்பட்டது. இந்திரா காந்திரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என பிளவுபட்ட தருணம்.. 1975-ல் இந்திரா அவசரநிலையை பிரகடனம் செய்தார். அப்போது காமராஜர் கடுமையாக எதிர்த்தார். அந்த காலகட்டத்தில் இந்திரா வீழ்த்தப்பட்டால் காமராஜரை பிரதமராக்குவது என்பது ஜெய்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட மூத்தவர்களின் சான்ஸாக இருந்தது என சொல்லப்பட்டது. ஆனால் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதியே காமராஜர் மறைவெய்தினார். ஆக காமராஜர் எனும் தமிழரை தேடி 3-வது முறையாக பிரதமர் வாய்ப்பு வந்த போதும் அது நடைமுறைக்கு வராத போதும் திமுக எனும் கட்சிக்கு எந்தவித வகிபாத்திரமும் இல்லை என்பதுதான் தெள்ளத் தெளிவு.
அடுத்ததாக 4-வது முறை ஜிகே மூப்பனாருக்கு பிரதமர் பதவி தேடி வந்தது; வேட்டி கட்டிய தமிழன் பிரதமராகக் கூடிய வாய்ப்பு வந்தது என சொல்லப்பட்டது.
1996-ல் நடந்தது என்ன?: 1996-ல் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் இரண்டாக பிளவுபட்டது. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானது. அது திமுகவுடன் கூட்டணி வைத்தது. அதே காலத்தில் தேசிய அளவிலும் காங்கிரஸ் செல்வாக்கை இழக்க தொடங்கியது- பாஜக தலையெடுக்க தொடங்கியது. அப்போது மாநில கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடிய சூழ்நிலை இருந்தது. அந்த தருணத்தில் பிரதமர் பதவிக்கு ஜிகே மூப்பனார், தேவகவுடா, சந்திரபாபு நாயுடு என பலரது பெயர்களும் மாநிலந்தோறும் அடிபட்டன. இறுதியில் தேவகவுடா பிரதமரானர்; அவரைத் தொடர்ந்து குஜரால் பிரதமரானார். அப்போது ஜோதிபாசு, சுர்ஜித் சிங் ஆகிய இடதுசாரி தலைவர்களும் பிரதமர் ரேஸில் முதன்மையாக இருந்தனர். ஆனால் இடதுசாரிகள் பிரதமர் பதவியை ஏற்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனாலும் பிரதமர் பதவி மூப்பனாருக்கு கிடைக்கவிடாமல் செய்தது திமுகதான் என்கிற பொதுவான பொரணித்தனமான குற்றச்சாட்டு காலந்தோறும் இருக்கிறது. அதனையேதான் அமித்ஷாவும் தற்போது முன்மொழிந்திருக்கிறார்.
மூப்பனார் பிரதமர் பதவி நடந்தது என்ன? : 2010-ம் ஆண்டு கும்பகோணத்தில் மூப்பனார் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலையை திறந்து வைத்தவர் 2010-ல் மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி. ஒரு சாதாரண மத்திய அமைச்சர் அல்ல. இந்திரா, ராஜீவ் மறைவுகளின் போதும் அதன் பின்னரும் வாழ்நாள் முழுவதும் பிரதமர் பதவியை அடைய துடியாய் துடித்தவர்; பிரதமர் பதவி அவரது வாழ்நாளில் எட்டா கனியாகிப் போனது; ஜனாதிபதி பதவிதான் அவருக்கு கிடைத்தது.
அப்படிப்பட்ட பிரணாப் முகர்ஜிதான் 2010-ம் ஆண்டு கும்பகோணம் நிகழ்ச்சியில் பேசுகையில், நாட்டின் மாபெரும் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய ஜி.கே.மூப்பனாரின் சிலையை திறந்துவைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும், எனக்கும் ஏற்பட்ட உறவு 40 ஆண்டு காலம். அந்த காலங்களில் அவருடன் பணியாற்ற அற்புத வாய்ப்பு எனக்கு கிடைத்தது. காந்தியடிகள் வழியில் அரசியலில் அவர் எளிமையாகவும், தூய்மையானவராகவும் இருந்தார். மிகவும் பாரம்பரிய மிக்க, செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த அவர், தனது வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களுக்காக பணியாற்றினார். காங்கிரஸ் கட்சி பிரிந்த போது மூப்பனார் தனது ஆதரவாளர்களோடு இந்திராகாந்தி தலைமையை ஆதரித்தார். இந்திராகாந்தியின் முக்கிய தளபதிகளுள் ஒருவராகவும் ஜி.கே.மூப்பனார் விளங்கினார். 1996-98-ல் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமையும் நிலை. அப்போது முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை பிரதமர் ஆக்க முடியாத நிலை. இதையடுத்து ஜோதிபாசுவை பிரதமர் ஆக்க முயன்ற போது அவர்களது கட்சி தலைமை மறுத்து விட்டது. அப்போது நான் மூப்பனார் பெயரை பரிசீலனை செய்தேன். இது குறித்து மூப்பனாரிடம் கூறி நீங்கள் பிரதமர் ஆக வேண்டும் என்று கேட்ட போது அதற்கு அவர் எனக்கு பதவி, அதிகாரம் தேவை இல்லை. சாகும்வரை மக்கள் தலைவராக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி அதன்படி செயல்பட்டார். காந்தியடிகளுக்கு பிறகு பிரதமர் பதவியை நிராகரித்தவர்கள் 3 பேர். பெருந்தலைவர் காமராஜர், ஜி.கே.மூப்பனார், சோனியாகாந்தி ஆகியோர் தான். சோனியாகாந்தி 2 முறை பிரதமர் பதவி தேடி வந்த போதும் நிரகாரித்து விட்டார். அந்த அளவிற்கு தியாக மனம் படைத்தவர்கள். மக்கள் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அதற்காக உங்கள் முன்னால் நான் தலை வணங்குகிறேன் என்றார் பிரணாப்.
ஆக மூப்பனாரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தது நான்: ஆனால் தமக்கு அந்த பதவி தேவை இல்லை என தூக்கிப் போட்டது மூப்பனார்தான் என பகிரங்கமாக - ஒரு வாக்குமூலமாக சொன்னவர் பிரணாப் முகர்ஜி- அவர் ஒன்றும் திமுகவை சேர்ந்தவர் இல்லைதான் என்பதை அமித்ஷாக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்












Click it and Unblock the Notifications