கூட்டுறவுத்துறையில் 3,353 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் பெரிய கருப்பன் குட் நியூஸ்
சென்னை: மாநில கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களும், நியாய விலை கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் போன்ற பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. இதுதவிர தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 13 ஆயிரத்து 266 பணியாளர்களை தேர்வு செய்வதற்கு தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் 9 ஆயிரத்து 913 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,353 பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சட்டசபையில் தெரிவித்தார்.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று சட்டசபை விவாதத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில்,"முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், நகைக்கடன் என மொத்தம் ரூ.19,145 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் 38 லட்சத்து 82 ஆயிரத்து 734 பேர் பயன்பெற்றுள்ளனர். கடந்த 2021-22-ம் ஆண்டில் 14 லட்சத்து 84 ஆயிரத்து 52 விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 292 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 18 லட்சத்து 20 ஆயிரத்து 340 விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 410 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்து ஆயிரத்து 313 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.11 ஆயிரத்து 870 கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது, கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் 6,215 கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதில் 3,502 கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 2,713 ரேஷன் கடைகளும் விரைவில் சொந்த கட்டிடத்திற்கு மாறும்.
கடந்த காலங்களில் முறையாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறாத காரணத்தால் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படவில்லை. கூட்டுறவு சங்கத்தில் 2 கோடியே 46 லட்சத்து 14 ஆயிரத்து 949 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இயற்கை மரணம், உறுப்பினராக நீடிக்க தகுதியின்மை, உரிய பங்குத்தொகை செலுத்தாமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து ஏராளமானோர் நீக்கப்பட்ட நிலையில் தற்போது 1 கோடியே 59 லட்சத்து 3 ஆயிரத்து 966 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
நீதிமன்ற வழிகாட்டுதல் படி இவர்களில் 97 லட்சத்து 83 ஆயிரத்து 634 பேர் மட்டுமே ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை இணைத்துள்ளனர். மீதமுள்ள உறுப்பினர்களிடம் இந்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்ததும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும்.
மாநில கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களும், நியாய விலை கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் போன்ற பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. இது தவிர தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 13 ஆயிரத்து 266 பணியாளர்களை தேர்வு செய்வதற்கு தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் 9 ஆயிரத்து 913 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,353 பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்" இவ்வாறு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சட்டசபையில் பேசினார்.












Click it and Unblock the Notifications