சென்னையில் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்திற்கு விபூதி.. திருடி சொந்தமாக தொழில் தொடங்கிய என்ஜினியர்கள்
சென்னை: வேலை பார்த்த நிறுவனத்தின் மென்பொருள் ரகசியங்களை தகவல்களை திருடி, சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க முயற்சித்த 5 என்ஜினீயர்கள் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல நாட்களாக நிறுவனங்களில் வேலை செய்வோர சொந்தமாக பலர் தொழில் ஆரம்பிக்க நினைப்பார்கள். அப்படி ஆரம்பிப்பது தவறு இல்லை. ஆனால் தான் வேலை பார்த்த நிறுவனத்திற்கு ஆப்பு வைத்து சிலர் தொழிலை தொடங்குவார்கள். தான் வேலை பார்த்த நிறுவனத்தின் கஸ்டமரை தனது கஸ்டமராக மாற்றுவது, அவர்களின் சாப்ட்வேர்களை திருடுவது, அவர்களின் தொழில் நுட்பங்களை திருடுவது போன்ற செயல்களை அப்படியே செய்வார்கள்.

சிலர் மொத்தமாக அந்த நிறுவனத்தை அட்ட காப்பி அடித்து தொடங்குவார்கள். இதெல்லாம் வழக்கமாக நடப்பது தான். அப்படித்தான் சென்னையில் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு 5 என்ஜினீயர்கள் விபூதி அடித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் சொல்லியே குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு திருடப்பட்ட விஷயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செயல்படும் குறிப்பிட்ட தனியார் மென்பொருள் நிறுவனத்தின் நிதி மேலாளர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் அளித்தார். அந்த புகார் மனுவில் மேலாளர் கூறுகையில், நாங்கள் 'அமேசான் வெப் சர்வீஸ் மூலம் சாப்ட்வேர்களை தயாரித்து, வங்கிகளுக்கு கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். இந்த சாப்ட்வேர்களின் ரகசியத்தை எங்கள் கம்பெனியில் வேலை பார்த்து வந்த சிலர் திருடி உள்ளார்கள்.
இந்த விஷயம் எங்களுடைய வாடிக்கையாளர்கள் மூலம் தெரியவந்தது. நாங்கள்தயாரிக்கும் சாப்ட்வேர்களின் ரகசியத்தை திருடிய அவர்கள், தனியாக கம்பெனி தொடங்க திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது மிகப்பெரிய மோசடியாக கருதுகிறோம். இந்த மோசடியில் ஈடுபட்ட பணியாளர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு புகார் மனுவில் தனியார் நிறுவன மேலாளர் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் 5 என்ஜினீயர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சாப்ட்வேர்களை திருடி மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த எடிசன் (வயது 29), ராம்குமார் (29), ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த காவ்யா (29), பெங்களூருவைச் சேர்ந்த ரவீதா (40), புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த கருப்பையா (26) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர், இவர்கள் அனைவரும் புகார் கொடுத்த நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றியவர்கள் என்பதும் இதில் எடிசன் என்பவர்தான் மூளையாக செயல்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications