ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்! பள்ளி, கல்லூரிகளில் 7,535 பணியிடங்கள்.. ஆண்டு அட்டவணை வெளியிட்ட டிஆர்பி
சென்னை: அரசு பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள 7,535 பணியிடங்கள் நடப்பு 2025 ஆம் ஆண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வானது வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்றும் டிஆர்பி தெரிவித்துள்ளது.
டிஆர்பி எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வு, செட் தேர்வு மற்றும் நியமன போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக டெட் எனப்படும் தகுத்தேர்வினையும், உயர் கல்வித்துறையில் உதவி பேராசிரியர்களுக்கான தகுதித்தேர்வான செட் தேர்வையும் டிஆர்பி நடத்தி வருகிறது.

இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கான நியமன போட்டித் தேர்வினை நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதற்கான ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டு அதன்படி தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது நடப்பு 2025 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் மொத்தம் 7,535 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:-
* அண்ணா பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர், உதவி நூலகர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 232 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தேர்வானது அடுத்த மாதம் ஏப்ரலில் நடக்கிறது.
* இதேபோன்று சட்டப்படிப்பில் இணை பேராசிரியர், சட்டப்படிப்பு உதவி பேராசிரியர் ஆகிய பதவிகளில் 132 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான போட்டித்தேர்வானது வரும் மே மாதம் நடைபெறும்.
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜூலை மாதம் நடத்தப்படும். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே நடைபெற்று விட்டது.
* முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 1,915 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும். இதற்கான போட்டித் தேர்வானது வரும் நவம்பர் மாதம் நடைபெறும்.
* பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பணியில் 1,205 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பானது வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும். இதற்கான தேர்வானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறும்.
* வட்டார கல்வி அலுவலர் பணியில் 51 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பானது வரும் நவம்பர் மாதம் வெளியாகும். இதற்கான தேர்வானது அடுத்த ஆண்டு மார்ச் 2026 இல் நடைபெறும்.
* இவ்வாறாக மொத்தம், 7,535 பணியிடங்களுக்கான அறிவிப்பினை டிஆர்பி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications