ஜல்லிக்கட்டு இனிக்குது.. மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கேட்டா கசக்குதா? நெட்டிசன்கள் ஆவேசம்
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரை பணயம் வைத்து விளையாடும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஆண்டு தோறும் நடைபெறும் போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாடுகிறார்கள். இறுதியில் அண்டாவும், சைக்கிளும் கொடுத்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என நெட்டிசன்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

x சமூக வலைதளத்தில் இது குறிதது @tamilravi என்கிற நபர் கூறியதாவது, "தமிழ்நாட்டு மக்கள் சல்லிக்கட்டுக்காகப் போராடுகிறார்கள். தமிழ்நாடு அரசு சல்லிக்கட்டை நெறிப்படுத்தி மாபெரும் மாடுபிடி அரங்கத்தை எல்லாம் கட்டுகிறது. ஆனால், அதில் வென்று வரும் வீரர்கள் அரசு வேலை கேட்டால் மட்டும் ஏன் எல்லோரும் ஏளனமாகப் பார்க்கிறார்கள் என்று புரியவில்லை.
மற்ற விளையாட்டுகளில் கலந்து கொள்வோருக்கு எல்லாம் கோடிக்கணக்கில் பரிசுத் தொகை, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுமெனில், சல்லிக்கட்டில் வெல்வபவருக்கு ஒரு காவலர் வேலை கூடவா போட்டுத் தர முடியாது? மாடுபிடிப்பதை ஒரு விளையாட்டாக ஏற்க முடியாதெனில், அதில் திறமை காட்டும் வீரர்களைக் கபடி, மற்போர் போன்று பிற விளையாட்டுக்களில் பயிற்சி தந்து அரசு வேலைவாய்ப்புகளைத் தரலாமே?
தமிழ்நாட்டைத் தாண்டித் தேசிய, உலகளாவிய அளவில் செல்லுபடியாகாத ஒரு விளையாட்டை ஏன் ஒரு வீரவிளையாடு என்று விதந்தோத வேண்டும்?
சல்லிக்கட்டைப் பார்க்கப் போகிறவர்கள் தங்கள் பிள்ளைகளை மாடுபிடிக்க அனுப்ப மாட்டார்கள் எனில், அதை எப்படியொரு சமத்துவமான விளையாட்டாகக் கருத முடியும்? அத்தகைய ஒரு விளையாட்டை ஊரே அரங்கத்தில் அமர்ந்து பார்ப்பது உரோம ஆட்சிக்காலத்து Gladiator விளையாட்டுகளை நினைவூட்டவில்லையா?
பண்பாட்டைக் காக்கிறோம் என்கிற பெயரில் வெறும் சைக்கிள், கட்டில் போன்ற பரிசுகளுக்காக ஏன் சில இளைஞர்கள் ரத்தம் சிந்திச் சாக வேண்டும்?
மாடுபிடிக்கப் போகிற இளைஞர்களால் அந்த மாடுகளை வாங்கி வளர்க்க முடியாது, மாடு வளர்ப்பவர்களின் சாதி அடிப்படையில் மாடுகளைப் பிடிப்பதில் சண்டை வருகிறது என்றால், அந்த விளையாட்டு தேவையா?
இந்த உறுத்தல்களையெல்லாம் தாண்டி, சிந்து சமவெளிநாகரிகக் காலம் தொட்டு நடைமுறையில் உள்ள தமிழர் மரபின் வரலாற்றுச் சாட்சியாக உள்ள காரணத்திற்காக, இந்த விளையாட்டு தொடர வேண்டுமெனில்,
* அரசு, ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரர்களுக்குரிய உடற்கவசங்களை வழங்கிப் பாதுகாப்பைக் கூட்ட வேண்டும்.
* மாடுபிடி விளையாட்டில் சாதியின் பிடியைத் தளர்த்த அரசின் கால்நடைத்துறை சார்பாகவே மாடுகளைக் களமிறக்கலாம்.
* பிற மாநில, தேசிய வீரர்களும் கலந்து கொள்ளும் வகையில் மாபெரும் பரிசுத் தொகைகளை அறிவிக்க வேண்டும்.
* மாடுபிடி வீரர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.
தமிழ்ச் சமூகத்தில் அரசு வேலை என்பது ஒரு அடிப்படைச் சமூகப் பாதுகாப்பு. அமைச்சர்கள் இழவு விழுந்த வீட்டுக்கு ஆறுதல் சொல்லப் போனால் கூட, அங்குள்ள குடும்பத்தவர்கள் அரசு வேலை தான் கேட்கிறார்கள். அரசு வேலைக்கு வரக்கூடிய தகுதியுள்ள இளைஞர்கள் மாடுபிடிக்கப் போகும் அளவுக்கு வேலைவாய்ப்பின்மைக் கொடுமை இருக்கிறது என்றால், அரசு இன்னும் பல இலட்சம் நிலையான அரசு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.
இவற்றையெல்லாம் கேட்க வேடிக்கையாக இருந்தால், சல்லிக்கட்டு விளையாட்டுகளைத் தமிழ்நாடு அரசே தடைசெய்து விட்டு, AR, VR மூலம் Video Game விளையாட்டுகளாகச் சல்லிக்கட்டை அறிமுகப்படுத்தலாம். தமிழ்நாட்டின் அரிய வகை மாட்டினங்கள் அழிந்து போகுமென்று பண்ணையார் ஆர்வலர்கள் யாராவது குமுறினால், மாடுகளின் விந்துகளை அறிவியல் முறைப்படிச் சேமித்து வைக்கலாம்.
தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறது என்று சொல்லும்போது, தமிழ்ச்சமூகம் அதற்கேற்ப அனைத்து வகைகளிலும் நவீனமாக வேண்டும்" என்று கூறியுள்ளார். இவரது கருத்து சோஷியல் மீடியாக்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications