கரும்பு தின்ன கூலியா? மாதம் 12 ஆயிரமும் கொடுத்து தொழில் பயிற்சி! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசுடன் இணைந்து திண்டுக்கல் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது. ஏற்கனவே நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு சார்பில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் முகாம் மூலம் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கான முகாம் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM) ஜூன் -2025 (தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்) திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 09.06.2025 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் திண்டுக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமில் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்த பட்சம் ரூ.8050/- முதல் ரூ.12,000/- வரை வழங்கப்படும்.
எனவே, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள். மற்றும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவலுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அவர்களை 0451-2970049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்க விரும்புவோர் திண்டுக்கல், அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் 09.06.2025 அன்று நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்" என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications