மாதம் 5000 வங்கி கணக்கிற்கே வரும்..பிரதம மந்திரி இன்டெர்ன்ஷிப் பயிற்சி..இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
டெல்லி: பிரதம மந்திரி இன்டெர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதம மந்திரி தொழிற்பயிற்சி திட்டத்தில் சேரும் படித்து முடித்த கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் 12 மாதங்கள் தொழில் பயிற்சி வாய்ப்பு கிடைக்கும். அத்துடன் மாதம் ரூ.5000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
நாட்டில் தொடர்ந்து வேலையில்லா திட்டம் அதிகரித்து வரும் நிலையில், படித்து முடித்த இளைஞர்கள் சரியான பயிற்சி பெற்று, நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேருவது என்பது நடைமுறையில் சவாலான காரியமாக மாறிவிட்டது. ஏற்கனவே வேலையில் உள்ளவர்களின் நண்பர்கள், உறவினர்களின் வழிகாட்டுதல்களால், குறிப்பிட்ட சிலரே பெரிய நிறுவனங்களில் வேலைக்கான பயிற்சிகளை பெற்று, அவர்களே நல்ல வேலையிலும் சேர்ந்து வருகிறார்கள்.

மற்றவர்களுக்கு எந்த பயிற்சி எடுத்தால் எந்த வேலைக்கு போகலாம், என்ன வேலைக்கு எப்படி ஆரம்பிக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் சந்தை எப்படி இருக்கிறது என்பது பற்றி போதிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக கிடைத்த வேலைக்கு சென்று, வாழ்க்கையை ஓட்டும் நிலை இருக்கிறது. இந்த விஷயத்தில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள, அவர்கள் பயிற்சி காலத்தில் மாதம் 5000 உதவி தொகையும் தருவதற்கு முடிவு செய்துள்ளது.
இதற்காக மத்திய அரசு இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி திட்டமான பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனாவை அக்டோபர் 12ம் தேதியான இன்று முதல் அறிமுகம் செய்து வைத்துள்ளது. விஜயதசமி தினமான இன்று, பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் , 12 மாத பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தையும் மத்திய அரசு அறிவித்துள்து. இந்த திட்டத்தில் சேருவோருக்கு மாதம் மாதம் 5000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிற்கு ஓராண்டுக்கு அனுப்பிவைக்கப்படும். இதில் 4500 ரூபாய் பணத்தை மத்திய அரசும், நிறுவனம் சார்பில் 500 ரூபாயும் வழங்கப்படும். வேலையில்லாத 21 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், பெண்கள் இந்த திட்டத்தில் சேர முடியும். குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இந்நிலையில் மத்திய அரசு பிரதம மந்திரி இன்டர்ஷிப் யோஜனா திட்டம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், "பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான இணையதளத்தில் இதுவரை 193 நிறுவனங்கள் சுமார் 91 ஆயிரம் வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளன. மத்திய அரசால் இம்மாதம் 3 ஆம் தேதி சோதனை அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இன்டர்ன்ஷிப் போர்டலில் இன்று முதல் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம். நிறுவனங்களும் வேலை வாய்ப்புகளை பதிவு செய்யவும் ஏற்கனவே போர்ட்டல்திறக்கப்பட்டுவிட்டது. 2024-25 நிதியாண்டில் 1.25 லட்சம் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. https://pminternship.mca.gov.in என்ற வலைதளம் மூலம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு மொத்தம் 800 கோடி ரூபாய் செலவாகும்.
21 முதல் 24 வயதுக்குட்பட்ட ஒரு கோடி இளைஞர்களுக்கு அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு இன்டர்ன்ஷிப் வழங்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு 12 மாதங்களுக்கு மாதம் தோறும் ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவியும், ஒருமுறை மானியமாக ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும். 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 737 மாவட்டங்களில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படும். எண்ணெய், எரிவாயு மற்றும் எரிசக்தி, பயணம் மற்றும் விருந்தோம்பல், வாகனம் மற்றும் வங்கி மற்றும் நிதி சேவைகள் உட்பட 24 துறைகளில் வேலை வாய்ப்புகள் இருக்கிறது.
விண்ணப்பதாரர்கள் இன்று முதல் இம்மாதம் 25ம் தேதி வரை https://pminternship.mca.gov.in இணையதளம் மூலம் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இன்டர்ன்ஷிப்பின் காலம் 12 மாதங்கள் ஆகும். இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கான சிறந்த நிறுவனங்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றால், கடந்த மூன்று ஆண்டுகால கார்ப்பரேட் சமூகப் பொறுப்புச் செலவினங்களின் சராசரியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தன்னார்வத்துடனே இணைந்துள்ளன. இது தவிர, திட்டத்தில் பங்கேற்க விரும்பும் வங்கி அல்லது நிதி நிறுவனம், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இணையலாம்" என மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications