குரூப் 4 தேர்வு அறிவிக்கை, குரூப் 2 தேர்வு முடிவுகள்.. டிஎன்பிஎஸ்சிக்கு எஸ்டிபிஐ சரமாரி கேள்வி
நெல்லை: அரசுப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் அறிவிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் ஏற்புடையதல்ல என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் பணியில் தொடங்கி துணை ஆட்சியர் வரையிலான பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றது.

இத்தேர்வுகள் தொடர்பான திட்ட அறிக்கையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் வெளியிடும். அந்த வகையில், நடப்பாண்டு ஆகஸ்டு வெளியிட்ட திட்ட அறிக்கைப்படி, நவம்பர் மாதம் குரூப்-1 தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை. அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகளும் 9 மாதங்கள் ஆகியும் இன்னும் வெளியிடப்படவில்லை. மட்டுமின்றி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையும் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த காலதாமதமானது, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுளுக்கு முழுநேரமாக தயாராகும் இலட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதோடு, வயது உச்சவரம்பின் விளிம்பில் உள்ள தேர்வர்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலும் இந்த தாமதம் அமைந்துள்ளது.
அரசு வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களின் நம்பிக்கையில் நிராசையை ஏற்படுத்தும் வகையிலான டிஎன்பிஎஸ்சி-யில் நிகழும் தாமதம் ஏற்புடையதல்ல. தமிழக அரசின் முக்கியப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) காட்டும் இத்தகைய அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் கால தாமதம் குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திக்கு மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் உயர்திரு தங்கம் தென்னரசு அவர்கள், போதுமான கணிப்பொறி மதிப்பீட்டு ஆய்வகம் இல்லாததும், வேறு சில எழுத்துத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தப் பணிகளையும் சுட்டிக்காட்டி, தாமதத்திற்கு காரணத்தை தனது பதில் மறுப்புரையில் தெரிவித்துள்ளார். அரசுப் பணிக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சரின் இந்த விளக்கம் ஏற்புடையதல்ல.
அரசு அலுவகங்களில் காலி பணியிடங்களின் அதிகரிப்பு காரணமாக, அரசு அலுவலர்களுக்கு ஏற்படும் வேலைப்பளு அதன் காரணமாக ஏற்படும் தொய்வு, இதனால் பொது மக்களுக்கு அரசின் சேவைகள் சென்று சேர்வதில் கால தாமதம் போன்ற இடர்கள் ஏற்படுகின்றன. மேலும், அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பதால் மக்களுக்கு செல்ல வேண்டிய நலத்திட்டங்களில் பெரும் தடை ஏற்படவே வழிவகுக்கும்.
டிஎன்பிஎஸ்சி-யில் நிகழும் இத்தகைய தாமதத்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பேரை அரசு வேலையில் பணியமர்த்தப் போவதாக கூறியுள்ள முதல்வரின் வாக்குறுதி எப்படி நிறைவேறும் என்கிற கேள்வி எழுகிறது.
நடப்பாண்டு வெளியாக வேண்டிய குரூப்-1 அறிவிப்பு, காலதாமதமாக அடுத்தாண்டு வெளியாகும் பட்சத்தில், வயது வரம்பின் விளிம்பில் உள்ளவர்கள் தேர்வை எழுதக் கூட முடியாத நிலை ஏற்படும். ஆகவே, தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு நடப்பாண்டிற்குள் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவினை விரைவில் வெளியிட்டு நேர்முகத் தேர்வையும் விரைவில் நடத்த வேண்டும். அதோடு குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையையும் இந்த மாதத்தில் வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications