தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி.. வங்கிகளில் வேலை.. திருநெல்வேலி இளைஞர்களுக்கு குட் நியூஸ்
திருநெல்வேலி: தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, திருநெல்வேலி ஸ்ரீபுரம் பீமா ஜூவல்லரி அருகில் உள்ள ரோகிணி கோல்டு அகாடமியில் வருகிற 20-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.
கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் அடகு நிதி நிறுவனங்கள் என ஒவ்வொரு வங்கியிலும் நகை மதிப்பீட்டாளர்கள் தான் நகைகளை உரசி பார்த்து அடகு வைப்பதற்கான பணத்தை நிர்ணயம் செய்கிறார்கள். இதேபோல் பல்வேறு நகைக்கடைகளிலும் பழைய நகைகளை உரசி பார்த்து மதிப்பிடும் பணியை நகை மதிப்பீட்டாளர்கள் தான் செய்கிறார்கள்.. இந்த பணிக்கு பெரிதாக படித்திருக்க வேண்டும் என்றெல்லாம் தேவை இல்லை. வெறும் 8ம் வகுப்பு படித்திருந்தாலே நல்ல சம்பளத்தில் வேலைக்கு போக முடியும். இதற்கு முறைப்படி நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதற்கு பயிற்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவ்வப்போது அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் திருநெல்வேலியில் தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, நெல்லை ஸ்ரீபுரம் பீமா ஜூவல்லரி அருகில் உள்ள ரோகிணி கோல்டு அகாடமியில் வருகிற 20-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. தங்கத்தின் தரம் அறிதல், கடன்தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதம் குறித்தும், தங்கம், செம்பு, வெள்ளி, ஆகிய உலோக தரம் அறிதல், உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட், தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, ரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள், ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல், அதற்கான வழிமுறைகள் குறித்தும் கற்று தரப்படுகிறது.
மேலும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிகள் மற்றும் அவற்றில் சேரும் முறைகள், அரசு வழங்கும் உதவிகள், மானியங்களை பெறுவது குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது.
18 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள், பெண்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். வயது வரம்பு, கல்வித்தகுதி தேவையில்லை. பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பயிற்சி கட்டணம் ரூ.7,700 ஆகியவற்றுடன் சென்று பயிற்சியில் சேரலாம். அல்லது 9842180162 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். இந்த சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications