தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராவ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: கடந்த 2024 ஜூன் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரையில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 17 ஆயிரத்து 702 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு நிர்ணயித்த இலக்கானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில் 7 மாதங்களுக்கு முன்பாகவே அந்த இலக்கு எட்டப்பட்டிருக்கிறது.
பலரும் அரசு பணியில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் குறைவான நபர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதிலும் விடாமுயற்சி மற்றும் முறையான பயிற்சி பெற்றவர்களே குரூப் தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள். அதேநேரம் லட்சக்கணக்கில் காலியாக உள்ள அரசு பணிகளை படிப்படியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

எனவே அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேர்வுகள் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் சப் கலெக்டர், டி.எஸ்.பி, வணிகவரி உதவி ஆணையர் உள்ளடங்கிய 72 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ முதல் நிலைத் தேர்வினை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 2.49 லட்சம் தேர்வர்கள் எழுதினார்கள்.
அதே போல, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் விஏஓ, வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் சுமார் 13 லட்சம் பேர் தேர்வு எழுத போகிறார்கள். இதேபோல் பலர் தேர்வுகள் எழுதி அரசுப்பணி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2024 ஜூன் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரையில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 17 ஆயிரத்து 702 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்கத்தைவிட கூடுதலாக 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு பணிகள் நடைபெற்று வருகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "அரசுப்பணியை எதிர்நோக்கி இருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 17,595 காலிப்பணியிடங்கள் ஜனவரி 2026க்குள் நிரப்பப்படும் என அரசின் சார்பில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வர்களின் நலன் கருதி தேர்வுப் பணிகளை துரிதப்படுத்தி, ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள 17,702 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு நிர்ணயித்த இலக்கானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில் 7 மாதங்களுக்கு முன்பாகவே அந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கூடுதலாக 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப பணிகள் நடைபெற்று வருகின்றன," என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications