இன்ஜினியரிங் காலேஜ்ல சேரப் போகும் மாணவர்களே! உங்களுக்கு தான் இந்த முக்கிய அறிவிப்பு! வெளியான தகவல்!
சென்னை: பொறியியல் படிப்பில் சேர காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026-27 கல்வியாண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ம் தேதி அல்ல, ஜூலை 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டும் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசார் கல்லூரிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் சுமார் 1.08 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் ஒற்றைச்சாளர முறையிலான ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 3-ம் தேதி தொடங்கி ஜூன் 5-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு மொத்தம் 2.23 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுகளை விட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பித்த மாணவர்கள் பதிவேற்றம் செய்த கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை சரிபார்க்கும் பணி ஜூன் 8-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூன் 29-ம் தேதி நிறைவடைய உள்ளது.
முன்னதாக, தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ம் தேதி வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பி. விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"CBSE-யின் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் 21.06.2026 அன்று வெளிவந்த நிலையில் 29.06.2026-யில் வெளியிட இருந்த தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும். மேலும், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Counselling) தேதிகளும் அன்று அறிவிக்கப்படும்.
வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு (Grievance Redressal) காலம் 01.07.2026 முதல் 05.07.2026 வரை வழங்கப்படும்.இந்தக் காலகட்டத்தில் மாணாக்கர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்களை (TFCs) நேரில் அனுகலாம் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications