TNPSC Group 4: குரூப் 4 காலிப்பணியிடம் மீண்டும் அதிகரிப்பு.. கூடுதலாக 645 பணியிடங்கள் அறிவித்தது டிஎன்பிஎஸ்சி
சென்னை: குரூப் 4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பணிகளில் கூடுதலாக 645 காலிப்பணியிடங்கள் அறிவித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குரூப் -4 பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர். வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது.
கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை (26.09.2025) அன்று வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று (03.12 2025) வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும்.
2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 5101 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன.
2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர். மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications