வங்கியில் அதிகாரி ஆகனுமா? நேரடி நியமனம்.. ஐபிபிஎஸ் வெளியிட்ட பொன்னான வாய்ப்பு- விட்றாதீங்க
சென்னை: ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் ஐடி அதிகாரி, வேளாண் கள அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 1,007 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதி என்ன? தேர்வு முறை எப்படி, விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. பாரத ஸ்டேட் வங்கி தவிர்த்த இதர 11 பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஐ.பி.பி.எஸ் எனப்படும் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.

5,208 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* ஐடி அதிகாரி - 203
* வேளாண் கள அலுவலர் - 310
* ராஜ்பாஷா அதிகாரி - 78 பதவிகள்
* சட்ட அலுவலர் - 56 பதவிகள்
* மனிதவளம் / பணியாளர் அதிகாரி - 10
* சந்தைப்படுத்தல் அதிகாரி - 350 என மொத்தம் 1,007 பணியிடங்கள் உள்ளன.
பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் சிந்து வங்கி உள்ளிட்ட வங்கிகளில் இந்த பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வித் தகுதி:
* கல்வித் தகுதியானது பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். ஐடி ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் என்ஜினியரிங் / கம்ப்யூட்டர் டிகிரி / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் / ஐடி/ எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிஸ்கஸ் & கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் என்ஜினியரிங் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* வேளாண்மை கள அதிகாரி பணிக்கு மீன்வள அறிவியல்/ மீன்வளர்ப்பு/ கூட்டுறவு & வங்கி/ தோட்டக்கலை/ பால்வள அறிவியல்/ வேளாண்மை/ வேளாண் சந்தைப்படுத்தல் & கூட்டுறவு/ கால்நடை பராமரிப்பு (AH)/ கால்நடை அறிவியல்/ வேளாண் வனவியல்/ வனவியல்/ வேளாண் உயிரி தொழில்நுட்பம்/ பி.டெக் வேளாண் வணிக மேலாண்மை/ உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்து இருக்கலாம்.
சட்ட அதிகாரி பணிக்கு எல்.எல்.பி உள்ளிட்ட சட்டப்படிப்புடன் பார் கவுன்சிலில் அட்வகேட் ஆக பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை எப்படி?
தேர்வர்கள் மூன்று கட்ட தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலைத்தேர்வு, மெயின்ஸ் தேர்வு ஆகியவை நடைபெறும். இதில் பெறும் மதிபெண்கள் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இவை அனைத்திலும் பெரும் கட் ஆஃப் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்:
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். சென்னை, கோவை, கடலூர், மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திண்டுக்கல், தரம்புரி, நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும். மெயின்ஸ் தேர்வு சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
தகுதியும் ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை படித்துதெரிந்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க வரும் 21.07.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-SPL-XV_Final1.pdf












Click it and Unblock the Notifications