விஜயனிடம் விசாரணை.. மனித உரிமை மீறலா? போனுக்கு உயிர் இருக்கா? இதெல்லாம் ஓவர்! திமுகவை சாடிய பிரபலம்
சென்னை: பத்திரிகையாளர் விஜயன் விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. போலீசாரின் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. சென்னை பத்திரிகையாளர் மன்றமும் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.. விஜயன் விவகாரத்தில் என்ன நடந்தது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சியும் விளக்கம் தந்துள்ளது. இப்படி பரபரப்புகள் ஓடிக்கொண்டிருக்க, மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, காவல்துறைக்கு ஆதரவாக ஒரு பேட்டி தந்துள்ளார். அதில் முக்கியமான ஒரு கேள்வியையும் கேட்டுள்ளார்.
Realone Voice சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "பத்திரிகையாளர் விஜயன் கைது செய்யப்படவில்லை.. விசாரணைக்கு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார். ஒரு பத்திரிகையாளர் என்பதால் அவருக்கு சட்டம் எந்தவிமான விதிவிலக்கும் அளிக்காது. டாக்டர், என்ஜினியர், வக்கீல் என யாராக இருந்தாலும் விசாரணைக்கு அழைக்கும்போது எழாத விமர்சனம், ஒரு பத்திரிகையாளரை அழைக்கும்போது மட்டும் ஏன் எழுகிறது?

பத்திரிகையாளர் விஜயன்
விசாரணைக்கும் கைதுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. போலீசார், தங்களுக்கு கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் பிற நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், உண்மைகளை அறியவே விஜயனை அழைத்து விசாரிக்கிறார்கள். இதில் சம்மன் அனுப்பி விசாரணை செய்வதை அலைக்கழிப்பு என்று சொல்வதை ஏற்க முடியாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்து, கேட்கப்படும் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பதே முறையாகும்.
விசாரணையின்போது செல்போனை பறிமுதல் செய்வதை ஏன் இவ்வளவு பெரிய மனித உரிமை மீறலாக சித்தரிக்கிறார்கள் என்று புரியவில்லை. செல்போனுக்குள் அந்தரங்க விஷயங்களோ, சட்டவிரோதமான பணம் சார்ந்த பரிவர்த்தனைகளோ அல்லது தவறான தொடர்புகளோ இருந்தால் மட்டுமே ஒருவர் பயப்பட வேண்டும். குற்றம் செய்யாத ஒருவருக்கு தன்னுடைய செல்போனை தந்து, விசாரணைக்கு ஒத்துழைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இருக்கக்கூடாது.
ஊடகவியலாளரின் செல்போன் பறிமுதல்
செல்போன் என்பது இன்று ஒரு மனிதனின் அடையாளமாக மாறிவிட்டது. அதில் மறைக்க எதுவுமில்லை என்றால், எதற்கும் பயப்பட தேவையில்லையே.
இந்தச் சம்பவத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதையும் நான் விமர்சிக்கிறேன். சில அரசியல் தலைவர்கள் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
முந்தைய ஆட்சிக்காலத்தில் ஃபேஸ்புக்கில் கருத்துப் பதிவிட்டதற்காக சாமானியர்கள் கைது செய்யப்பட்டபோதும், இது போன்ற பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டபோதும் முந்தைய திமுக ஆட்சியில் ஏன் அமைதியாக இருந்தார்கள்?
இன்று நடக்கும் விசாரணை, முறையான சட்ட நடைமுறைதான். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் இருந்தாலும் அல்லது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, போலீசார் தங்கள் கடமையைச செய்கிறார்கள். இதில் ஜனநாயகத்தின் 4வது தூண் ஒடுக்கப்படுகிறது என்று பேசுவது தவறான வாதம்.
கனிமொழி கண்டிக்கிறார்
சமுதாயத்தில் சாமானியர்கள் போலீஸ் ஸ்டேஷனில் அழைத்துச் செல்லப்படும்போது யாருமே கண்டுகொள்வதில்லை. ஆனால், செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது பிரபலமானவர்கள் வரும்போது மட்டும் இவ்வளவு பெரிய விவாதங்கள் எழுகின்றன. சமுதாயத்தின் இந்த ஸ்கேல் முறையே ஒரு சாபக்கேடு.
இந்த சம்பவத்துக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டபோது, இவர்களெல்லாம் எங்கே போனார்கள்? அந்த ஆட்சியில் இதைப் பற்றிப் பேச இவர்களுக்கு நியாயம் இருந்ததா? நீங்கள் எப்போதுமே நியாயமாகப் பேச வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காகப் பேசக்கூடாது.
போலீசாரை பொறுத்தவரை, ஆட்சியில் இருப்பவர்கள் என்ன உத்தரவு போடுகிறார்களோ, அதைச் செய்ய வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விசாரணை செய்யும்போது, விசாரணைக்கு உட்படுபவர் ஒரு பத்திரிகையாளரா, டாக்டரா, என்றெல்லாம் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எங்கே சந்தேகம் இருக்கிறதோ, எங்கே விசாரணை செய்ய வேண்டுமோ, அதை அவர்கள் செய்கிறார்கள்.
பெரிய டீவிங்
இந்த கைது நடவடிக்கைக்குப் பின்னால், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் இருக்கின்றன. அந்த வாக்குமூலங்களின் அடிப்படையில், திருநாவுக்கரசு போன்றவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே இவர்களிடம் விசாரணை நடக்கிறது. ஆனால், இதுபோன்ற பெரிய டீலிங்குகளில் விஜயன் எப்படித் தொடர்பு கொண்டார் என்பதுதான் பெரிய சந்தேகமாக இருக்கிறது.
இப்போதைக்கு 4 பேரைத் கைது செய்திருக்கிறார்கள். அந்த 4 பேர் தந்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜயனை விசாரணைக்குக் கூப்பிடுகிறார்கள் என்றால், ஏதோ ஒரு தொடர்பு இல்லாமல் கூப்பிட மாட்டார்களே.. ஆனால், விசாரணையின்போது, போனை வாங்கியதையே, மனித உரிமை மீறல் என்கிறார்கள். போனுக்கு உயிர் இருக்கா?
சீமான் பேசலாம்
இப்போது சீமான் இதைக் கண்டிக்கிறார் என்றால், அது அவரது பார்வை... கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டபோதும் கண்டித்தார், இப்போது விஜயன் கைது செய்யப்பட்டதையும் கண்டிக்கிறார். அது அவரது நிலைப்பாடு. ஆனால், திமுக-வினர் பேசலாமா? நீங்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசலாமா?
அன்றைக்கு பேஸ்புக்கில் பதிவு போட்டவர்களைக் கைது செய்து, அவர்களுக்கு எதிராக எவ்வளவோ நடவடிக்கைகளை எடுத்தீர்கள். அப்படியிருக்கையில், இப்போது நடக்கும் இந்த விசாரணை குறித்து நீங்கள் பேசுவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? இது முழுக்க முழுக்க அரசியல் பார்வைதான்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications