இந்திய ராணுவத்தில் சேர விருப்பமா.. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வந்தது மெகா அறிவிப்பு
சென்னை: கடலூரில் வரும் 2024 ஜனவரி 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக சென்னையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு தலைமையகத்தின் இயக்குனர் பாத்ரே அறிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று விரும்புவோர் அதற்கு தயாராகலாம். அடுத்த இரண்டு மாதத்தில் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்த கொண்டு தேர்வில் வென்று உடல் தகுதி தேர்விலும் வென்றால் உடனே பணியில் சேர முடியும். ராணுவத்தில் சேர வேண்டும் என்று சிறு வயது முதலே கனவுகளுடன் வாழ்பவர்களுக்கு 2024ம் ஆண்டின் தொடக்கத்திலேயே வாய்ப்பு அமைந்துள்ளது.

அதேநேரம் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு உடற்தகுதி தேர்வும், பின்னர் எழுத்து தேர்வும் நடக்கும். ஆனால் இப்போது தொடக்கத்திலேயே ஆன்லைன் எழுத்துத்தேர்வும், அதன்பிறகு உடல் தகுதித்தேர்வும் நடத்தப்பட உள்ளது. முன்னதாக 2023-24-ம் ஆண்டுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், நடப்பாண்டுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு தலைமையகத்தின் இயக்குனர் பாத்ரே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "நடப்பாண்டுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா மைதானத்தில் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஆள்சேர்ப்பு முகாமில் உடல் தகுதிக்கு மட்டுமே இளைஞர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். சான்றிதழ்கள் மீது குறைவான கவனம் செலுத்துகின்றனர். அதன் காரணமாக, நடப்பாண்டு முதல் உடல் தகுதிக்கு நிகராக, ஆவணங்களும் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும்.
முகாமில் பங்கேற்பவர்கள், தேர்வு நுழைவுச்சீட்டு, கல்வி சான்றிதழ்கள், போலீஸ் நடத்தை சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்பட 18 வகையான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்களின் தேர்வுகள் நிராகரிக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications