குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பு 9% அதிகரிக்கும்! எந்த துறை, எந்த நகரங்களில் வாய்ப்பு அதிகம்?
சென்னை: இந்தியாவில் வேலைவாய்ப்புச் சூழல் (Job ecosystem) 2025ம் ஆண்டில் பெரிய அளவில் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பில் சுமார் 9% வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு தகவல் தொழில்நுட்பம் (IT), சில்லறை வணிகம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) போன்ற துறைகள் முக்கிய காரணமாக இருக்கப்போகின்றன என்கிறது ஒரு ஆய்வு முடிவு.
வேலைவாய்ப்பு மற்றும் திறன் தொடர்பான Foundit (முந்தைய பெயர் Monster APAC & ME) வெளியிட்டுள்ள தகவலின்படி, நவம்பர் மாதத்தில் வேலை வாய்ப்பு 10% அதிகரிப்பும், அதற்கு முந்தைய மாதத்தில் 3% உயர்வும் காணப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டிரெண்ட் அடுத்த ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சிக்குப் பின்னால் புதிய தொழில்நுட்பங்களின் வருகை மற்றும் வணிக மாற்றங்கள் முக்கிய காரணிகளாக உள்ளன. குறிப்பாக, எட்ஜ் கம்ப்யூட்டிங், குவாண்டம் பயன்பாடுகள் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உற்பத்தி, சுகாதாரம் மற்றும் IT துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ஏஐ தொழில்நுட்பம் காரணமாக இ-காமர்ஸ், மனிதவளம் (HR) மற்றும் டிஜிட்டல் சேவைகளில் தேவைகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Foundit ஆய்வின்படி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், விளம்பர மேலாண்மை மற்றும் HR துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிக தேவை உள்ளது.
எந்தெந்த துறைகளில் அதிக வேலைவாய்ப்பு?
வேலைவாய்ப்பில் ஏற்படும் வளர்ச்சி எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. துறை மற்றும் பகுதி வாரியாக கணிசமான வேறுபாடுகள் இருக்கும். குறிப்பாக IT துறை 2025 ஆம் ஆண்டுக்குள் வேலைவாய்ப்பில் 15% அதிகரிப்பைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நல்லதொரு வளர்ச்சியாகும். சில்லறை துறை 12% வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக tier-2 மற்றும் tier-3 நகரங்களில் இந்த அதிகரிப்பு இருக்கும். தொலைத்தொடர்பு துறை AI, 5G மற்றும் IoT தொழில்நுட்பங்களில் வளர்ச்சியடைவதன் காரணமாக 11% வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.
எந்த நகரங்களில் அதிக வேலைவாய்ப்பு?
நகர அடிப்படையில் பார்த்தால், பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் 2025 ஆம் ஆண்டுக்குள் முறையே 10% மற்றும் 9% வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதங்களுடன் முன்னணியில் உள்ளன. ஹைதராபாத் மற்றும் சென்னை முறையே 8% மற்றும் 6% வளர்ச்சி எதிர்பார்ப்புடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த தகவல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பல்வேறு நகரங்களில் பரவலாக இருப்பதைக் காட்டுகிறது.
மற்ற துறைகளில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்?
- நிதி மற்றும் கணக்குகள் துறையில் டிஜிட்டல் படிப்பு படித்தோருக்கு 8% வேலைவாய்ப்பு அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- HR & நிர்வாகத் துறை 7% வேலைவாய்ப்பு அதிகரிப்பைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- IT துறையில் கிளவுட் நிபுணர்கள், AI/ML நிபுணர்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கு, 6% வேலைவாய்ப்பு அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Foundit இன் துணைத் தலைவர் அனுபமா பீம்ராஜ்கா கூறுகையில், நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை மட்டுமல்லாமல், தங்கள் தேடலை விரிவுபடுத்துகின்றன. இந்த அணுகுமுறை ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்று நம்புகிறோம். இது வணிக நிறுவனங்கள் புதிய திறமையாளர்களை பெறவும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப பணியாளர்களை உருவாக்கவும் உதவும் என்றார்.
2024 ஆம் ஆண்டு, உற்பத்தி, நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கியத் தொழில்களில் வேலைவாய்ப்பு அதிகரிப்பைக் கண்டது. கோயம்புத்தூர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற 2ம் கட்ட நகரங்களில் வளர்ச்சி அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications