Jobs: வாழ்க்கை ஒரு வட்டம்.. இவங்களுக்கெல்லாம் இனி சுக்ர திசை.. கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்
சென்னை: வாழ்க்கை ஒரு வட்டம்னு சும்மா யாரும் சொல்லல.. ஐடி துறை தான் கடந்த 20 வருடங்களாக மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. ஆனால் ஆட்டோமேசன் வந்த பிறகு அந்த துறையில் வேலைவாய்ப்புகள் படிப்படியாக சரிந்து வருகிறது. உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும் ஐடி துறையில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. அதேநேரம் ஐடி அல்லாத துறைகளில் தற்போது இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தற்போது ஐடி அல்லாத துறைகளான, பேங்கிங், நிதி சேவை மற்றும் இன்சூரன்ஸ் (Banking, Financial Services and Insurance (BFSI) ) ஆகிய துறைகளில் தான் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது.
'Naukri JobSpeak' ஜனவரி 2023 கணக்கின்படி கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு வேலைவாய்ப்பு 2% வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ஐடி அல்லாத துறைகளில் அண்மைக்காலமாக வேலைவாய்ப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.

பணிகள் எங்கெல்லாம்
அதேநேரம் மந்த நிலையிலும, ஜனவரி 2023 இல் ஐடி அல்லாத துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இன்சூரன்ஸ், ஆயில் & கேஸ் போன்ற துறைகளில் புதியவர்களை பணியமர்த்துவதில் வேகம் அதிகரித்துள்ளது. சுற்றுலா, வங்கி மற்றும் காப்பீடு துறையில் அதிக அளவில் பணியாளர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவதாகன Naukri.com இன் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் கூறினார்.

வங்கி துறை
ஜனவரி 2023 ல் ஐடி அல்லாத துறைகளில்அதிக வேலை வாய்ப்புகளைக் காணக்கூடிய துறைகள் என்று பார்த்தால், காப்பீடு துறையில் (93%), எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் (55%), சுற்றுலா துறையில் (53%), வங்கி துறையில் (37%), ரியல் எஸ்டேட் செக்டாரில் (31%), ஆட்டோ மொபைலில் (29%), பிபிஓ செக்டாரில் (16%) மற்றும் ஹெல்த்கேர் (10%) ஆகிய துறைகளில் பணி அமர்த்தல் நடந்துள்ளது.

தொலைத்தொடர்பு
இருப்பினும், நௌக்ரியின் தரவுகளின்படி, தொலைத்தொடர்பு, சில்லறை வணிகம் மற்றும் மெடிக்கல் பார்மா போன்ற துறைகளில் கவனமுடன் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் அல்லாத துறையில் BFSI துறை பெரும்பான்மையான வேலைகளை வழங்குகிறது. அதாவது பேங்கிங், நிதி சேவை மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. தற்போது நிதி, கணக்கியல், இடர் மேலாண்மை, இணக்கம் மற்றும் செல்வ மேலாண்மை ( finance, accounting, risk management, compliance, and wealth management) ஆகிய துறைகளில் புதிததாக ஏறக்குறைய 30% அளவிற்கு பணியாளர்கள் புதிதாக பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ்
இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மையமாக கருதப்படுவதால், உற்பத்தித் துறையில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார்கள். 5G இந்தியாவில் அறிமுகம் ஆவதால் தொலைத்தொடர்புத் துறை 2023 இல் மிகப்பெரிய வளர்ச்சிக்கு தயாராகி வருகிறது. தொலைதொடர்பு துறையில். தேவையில் சேல்ஸ், மார்க்கெட்டிங், ஆப்ரேசன்ஸ் மற்றும் கஸ்டமர் சர்வீஸ் போன்றவற்றில் பணியாளர்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

எங்கு வேலைகள்
சமீப காலங்களில் ஒரு சுவாரஸ்யமான போக்கு காணப்படுகிறது. நௌக்ரி ஜாப்ஸ்பீக் அறிக்கை ஜனவரி 2023 ஹைலைட் செய்து பார்த்தால் 12+ வருட அனுபவமுள்ள மூத்த நிபுணர்களுளின் தேவை அதிகரித்துள்ளது தெரிகிறது. . ஜனவரி 2023 - ஜனவரி 2022 ஐ ஒப்பிடும் போது 20% க்கும் அதிகமான அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது. அதேநேரம் புதியவர்கள் மற்றும் நடுத்தர அனுபவ நிலை வல்லுநர்களைப் பொறுத்தவரை, ஜனவரி 2023 இல் வேலை வாய்ப்பு நிலையான அளவிலேயே இருந்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஐடி அல்லாத துறைகளிலேயே இனி வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications