தனியார் துறையில் பணி வேண்டுமா? சென்னை கிண்டியில் நாளை பெறலாம்.. அனைவருக்கும் வாய்ப்பு.. ரெடியா?
சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை: சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு துவங்கும் இந்த வேலைவாய்ப்பு முகாம் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில் ஐடிஐ, டிகிரி, என்ஜினீயரிங் படித்தவர்கள் என அனைத்து தரப்பினரும் இலவசமாக பங்கேற்கலாம் என சென்னை கலெக்டர் அமிர்தஜோதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் 2வது அல்லது 3வது வார வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் படித்து முடித்து வேலை தேடி வரும் இளம்பெண்கள், இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தான் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

கலெக்டர் அறிவிப்பு
இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து பிப்ரவரி 17 ல் (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

எங்கு நடக்கிறது?
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்று பயன்பெற முடியும்.

யாருக்கெல்லாம் அனுமதி
இந்த முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலைவாய்ப்பு பதிவு ரத்து இல்லை
மேலும் இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் கிடைக்கப் பெறும் நபர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அதே போல், வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications