தேர்வர்களே ரெடியா இருங்க.. ரயில்வேயில் 1 லட்சம் பணியிடங்கள்.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்
டெல்லி: ரயில்வேயில் மேலும் 1 லட்சம் பேர் நியமனம் செய்யப்பட இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். கடந்த 10 வருடங்களில் 5 லட்சம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும், ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக ரயில்வேக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக ரயில்வே உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே நிறுவனத்தில் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.

1 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்
கை நிறைய சம்பளம், சலுகைகள் என ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இதனால், ரயில்வேயில் பணியாற்ற வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் கனவாக உள்ளது. தற்போது குரூப் சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பிக்க அவகாசம் நிறைவடைந்துள்ளது. 32,438 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் ரயில்வேயில் மேலும் 1 லட்சம் பேர் நியமனம் செய்யப்பட இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை கூறினார். அவர் மேலும் கூறியதாவது:- ரயில்வேயில் வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என எம்.பிக்கள் கூறினர். உண்மைக்கு மாறான தகவல்களை எப்படி அவையில் கூற முடியும்.
700-ல் இருந்து 80 ஆக குறைந்துள்ளது
ரயில்வே துறையை பொறுத்தவரை கடந்த 10 வருடங்களில் 5 லட்சம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சம் பேரை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில்வே பணி நியமனங்கள் அனைத்தும் வெளிப்படையாக ஒளிவு மறைவு இன்றி நடைபெறுகிறது. ரயில்வே விபத்துக்கள் 90 சதவிகிதம் குறைந்துள்ளன. 2005-06 காலத்தில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது 234 விபத்துக்கள் நடைபெற்றன.
ரயில்கள் தடம் புரண்டதை கணக்கில் எடுத்தால் 698 ஆக உள்ளது. சராசரியாக ஒருநாளைக்கு 2 விபத்துக்கள் நடைபெற்றன. மம்தா பானர்ஜி காலத்தில் ஒரு நாளைக்கு 165 விபத்துக்கள் நடைபெற்றன. ரயில் தடம் புரண்ட விபத்துக்களையும் கணக்கில் எடுத்தால் 395 ஆக இருக்கும். தினமும் ஒரு விபத்து சராசரியாக நடைபெற்றுள்ளது. தற்போது 2024-25 கால கட்டத்தில் 30 விபத்துகள் நடைபெற்றுள்ளன. தடம் புரண்ட விபத்துக்களையும் சேர்த்தால் 73 ஆக இருக்கும். எனவே, 700-ல் இருந்து 80 ஆக குறைந்துள்ளது. இதில் 10-ல் ஒரு பங்குதான்.
அடுத்த 5 ஆண்டுகளில் கவாச் அமைப்பு
மகா கும்பமேளாவின்போது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடந்து வருகிறது. அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் ஒட்டுமொத்த ரயில்வேயும் தானியங்கி பாதுகாப்பு தொழில்நுட்பமான கவாச் அமைப்புக்குள் கொண்டுவரப்படும். மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கிடப்பில் உள்ள அல்லது தாமதமான ரயில்வே திட்டங்களை விரைவில் முடிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மற்ற நாடுகளில் ரயில் கட்டணம் எவ்வளவு
இந்தியாவின் அருகாமையில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் பொது, ரயில் கட்டணம் குறைவாக உள்ளது. இந்தியாவில் 350 கிலோ மீட்டருக்கு ரூ.121 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் ரூ.400 ஆகவும் இலங்கையில் ரூ.413 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications