டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு.. தமிழக அரசு சொன்ன 'அந்த பாயிண்ட்'.. குட்நியூஸ்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரும் குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தினார்கள். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிட எண்ணிக்கை, பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடந்தது. பின்னர் ஜூன் 9-ல் குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினார்கள். இதன் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த செப்டம்பர் 11ம் தேதி குரூப் 4 தேர்வில் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் மேலும் குரூப் 4 பிரிவில் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் இருப்பதால் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: " தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 நபர்களுக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 நபர்களுக்கும் என மொத்தம் 68,039 நபர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சுதந்திர நாள் விழா உரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தவாறு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 75,000 இளைஞர்கள் பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட அமைப்புகள், அரசுத் துறைகள் வாயிலாக ஆயத்தப் பணிகள் செவ்வனே நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவரும் குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு துறையும் தங்களது காலிப் பணியிடங்களை நேரடியாகத் தெரிவித்து தேவையான பணியாளர்களை பெற்று வருகிறது. தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும் காலிப் பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.
கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வுகளை ஒப்பிடுகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் முறையே 9351, 6491 மற்றும் 7301, தேர்வுகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படுகையில் முறையே 11949, 9684 மற்றும் 10139 என அதிகரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டை பொறுத்தவரையில் 6244 என அறிவிக்கப்பட்டிருந்த காலிப்பணியிடங்கள் தற்பொழுது 6724 என அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கும்.
இது மட்டுமல்லாமல் பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தவாறு மேலும் 75,000 இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.
அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொழில் முன்னேற்றம் குறித்து எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளின் வாயிலாகவும், "நான் முதல்வன்" திட்டம் உள்ளிட்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் முயற்சியால் 5,08,055 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக பொறியியல், தொழில்நுட்பம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் போன்ற படிப்புகள் பயிலும் 27,73,847 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெற்று தரும் பணியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications