தமிழ்நாட்டில் இலவசமாக அரசே தரும் சூப்பர் பயிற்சி.. மாதம் ரூ.30000 உறுதி
கன்னியாகுமரி: தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ.படிப்பு இருக்கலாம் என நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.
படிக்கவில்லை என்று யாரும் கவலைப்பட வேண்டாம். படிக்காமல் போனாலும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தால் உங்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து சான்றிதழ் அளித்து , தினமும் உணவு , தங்குமிடம் கொடுத்து, 800 ரூபாய் சம்பளம் கொடுத்து அரசு தொழில் கற்றுக் கொடுக்கிறது.
இதை கற்றுக் கொண்டால் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் எளிதாக பெற முடியும். அல்லது சுயதொழில் தொடங்கி முன்னேற முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் இருக்கிறது என்றாலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட அலுவலகத்தில் இது பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
3 மாத கால திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகமானது எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து நடத்த உள்ளது.
பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ.படிப்பு இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40 ஆக இருத்தல் வேண்டும்.
பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பென்டர், பார்பென்டிங் மற்றும் ஸ்கப் போல்டிங் பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது.
உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இதேபோல் ஒரு வார கால பயிற்சி தையூரில் அமைய உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள், தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும்.
பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து இருத்தல் வேண்டும். 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, வளைப்பவர், கார்பென்டர், பார்பென்டிங் மற்றும் ஸ்கப் போல்டிங் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.
தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் அவர் தம் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்புடைய நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது மார்த்தாண்டம் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுக வேண்டும். இந்த பயிற்சி அடுத்த மாதம் 15 -ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications