மாதம் 1000 ரூபாய்.. 3 மாதங்களுக்கு ஒரு முறை 3000 ரூபாய்.. இளைஞர்களுக்கு தேனி கலெக்டர் குட்நியூஸ்
தேனி: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பதிவு செய்து, 31.3.2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பு தகுதியை பொறுத்து 600 முதல் 1800 வரையிலும், மாற்றுத்திறனாளிகள் என்றால், ரூ.600 முதல் 3000 வரை அரசு வழங்குகிறது. 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும் என்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேனி கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
வேலை கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர்கள், படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை தேடுவதற்காகவும், வேலைக்கு உரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ளவும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதேபோல் தொழில் முனைவோர் ஆக விரும்புவோருக்காக குறு, சிறு, நடுத்தர தொழில் துறை பயிற்சி அளிக்கிறது. குறு, சிறு, நடுத்தர தொழில் துறை மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.1,256 கோடி மானியம் தந்து, ரூ.3,768 கோடி வங்கிகடன் பெற்றுத் தந்து 40,590 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக உருவாக்கி உள்ளதாக அமைச்சர் தா மோ அன்பரசன் கடந்த நவம்பர் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார்.

தொழில் முனைவோர் பயிற்சியை தாண்டி, பாரம்பரிய தொழில் செய்வோருக்காக, தமிழக அரசு கலைஞர் கைவினைத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுகிறது. இதேபோல் தான் மத்திய அரசும் பிரதம மந்திரி விஸ்கர்மா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மத்திய அரசு உத்தியோகினி என்ற பெயரில் பெண்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது
அதேநேரம் பல்வேறு திட்டங்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தி வந்தாலும், வேலையில்லாத இளைஞர்களுக்கும் உதவி தொகை அளிக்கின்றன. இது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பதிவு செய்து, 31.3.2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வி தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள் எனில் ரூ.1,000 என 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. தகுதியுள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் விண்ணப்பத்தை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications