டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு.. 105 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! தேதி முடிய போகுது
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம், ஒருங்கிணைந்த டெக்னிக்கல் சர்வீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் சனிக்கிழமைதான் கடைசி நாள். எனவே தேவையான கல்வி தகுதி, ஆர்வம் இருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
105 பணியிடங்கள் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான) தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 28 ஆம் தேதிதான் கடைசி நாள். இன்னும் இரண்டு தினமே இருப்பதால் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: தமிழக அரசின் பல்வேறு நிறுவனங்களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எடுத்துக்காட்டாக தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள உயர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேனேஜர், அஸ்சிஸ்டண்ட் மேனேஜர், கல்லூரி நூலகர், கணக்கு அலுவலர், மூத்த அதிகாரி, ஆட்டோமொபைல் பொறியாளர், உதவி இயக்குநர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் ஆகிய பதவிகளில் 105 பேருக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். பிஇ, பிடெக், எம்பிஏ, முதுகலை நூலகர், சிஏ/ஐசிடபிள்யூ, பி.வி.எஸ்.சி & ஏஹெச் உள்ளிட்ட படிப்புகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. பணி அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பணியிடங்களுக்கு ஏற்ப வயது உச்ச வரம்பு மாறுபடுகிறது. அதிகபட்சமாக உதவி பொது மேலாளர் (நிதி) பதவிக்கு வயது உச்ச வரம்பு 47 ஆகும். இதுபோக அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் உண்டு. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்ப்டையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் கட்டாய தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு, மனத் திறன் அறிவு குறித்த வினாக்கள் இடம்பெற்றிருக்கும். 2-ஆம் தாளில், துறை தொடர்பான வினாக்கள் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
தேர்வு கட்டணம் எவ்வளவு: தேர்வுக்கட்டணமாக ரூ 200 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும். சிறப்புப் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பதிவு செய்யாதவர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.150 + 200 (தேர்வு கட்டணம்) செலுத்த வேண்டியிருக்கும். சிறப்பு பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து தளர்வுகள் உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 28.09.2024 கடைசி நாள் ஆகும். முதல் தாள் தேர்வு நடைபெறும் நாள்; 18.11.2024, இரண்டாம் தாள் தேர்வு: 18.11.2024 to 20.11.2024. தேர்வு அறிவிப்பினை அறிந்து கொள்ள https://tnpsc.gov.in/Document/english/CTSE%20INTERVIEW%20POSTS-ENGLISH_.pdf
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு ஆணையத்தால் நிரப்பப்படுகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது தேர்வு அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். தமிழகத்தில் அரசு பணிகளுக்காக படித்துக் கொண்டு இருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக டிஎன்பிஎஸ்சி உள்ளது. 2026- ஜனவரிக்குள் 18 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications