தமிழகத்தில் அங்கன்வாடிகளில் 7,783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு.. நாளை கடைசி நாள்
சென்னை: தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 3 ஆயிரத்து 592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 783 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு சமூக நலத்துறை அரசாணை பிறப்பித்திருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 7,783 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 முதல் 35 வயது வரை உள்ள அனைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி பெண்கள் 25 முதல் 38 வயது வரையிலும் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 20 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து பெண்கள் விதவைகள், ஆதரவற்ற பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் 20 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் 20 முதல் 43 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அதே கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பிற கிராமத்தை சேர்ந்தவராகவோ, அந்த கிராம ஊராட்சியின் எல்லையின் அருகில் உள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராகவோ இருக்கலாம். மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டுகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உரிய ஆவணங்களுடன் குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற 23-ந்தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications