டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் எழுதுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. வேலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு
வேலூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்டத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இந்த பயிற்சியில் பங்கு பெற விரும்பும் மாணவ மாணவியருக்கு அழைப்பு விடுத்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் டி.என்.பி.எஸ்.சி., டி.என்.எஸ்.யு.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி. உள்ளிட்ட தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2ஏ ஆகியவற்றுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மாதம் 14-ந் தேதி நடந்தது. இந்த நிலையில் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக சிறந்த பயிற்றுனர்களை கொண்டு அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். கூடுதல் தகவல்களை வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் தொடங்க உள்ளதாக ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலாவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
முதல்நிலைத் தேர்வு எழுதிய மாணவ -மாணவிகள் பயன்பெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு, இலவச பயிற்சி வகுப்புகள், மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இதில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் இவ்வலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பு அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களை [email protected] என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளளாம்.
மேலும் மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற பிரத்யேக இணைய தளத்தில் மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications