குழந்தை நீதி கதைகள்: நீ என்ன பெரிய புலியா? வாயை கொடுத்து வாங்கி கட்டியது யாருன்னு பாருங்க?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ் எப்படி இருக்கீங்க, உங்க லைப்ல உங்களைவிட வலிமையானவங்கள வம்பிழுத்து வசமா சிக்கியிருக்கீங்களா? இல்ல தப்பிச்சிருக்கீங்களா? நம்ம கதைல சிங்கத்தை வம்பிழுத்து வசமாக சிக்கியது யாருனு நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க.
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அசந்து படுத்து கொண்டிருந்தது. அப்போது அதன் காதுகளில் ஏதோ ரீங்காரம் கேட்டது. சிங்கம் அந்த பக்கம், இந்த பக்கமாய் தலையை திருப்பியது. ஆனாலும் அதன் காதுகளில் விடாமல் அந்த சத்தம் தொல்லை செய்தது. சிங்கம் யாரது என கேட்டதும் ஒரு கொசு சிரித்து கொண்டே நான் தான் என்றது.

சிங்கம் அமைதியாக, நான் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறேன் ஆகையால் தொல்லை செய்யாமல் கிளம்பு என்றது. கொசு, சிங்கத்தை விடாமல் தொல்லை செய்தது. உனக்கு என்னதான் வேண்டும் என்றது சிங்கம். நான் இப்படித்தான் தொல்லை செய்வேன் என்ன செய்ய முடியும் உன்னால் என்றது கொசு ஆணவமாக.
என்னால் உன்னை கொல்ல முடியும் தொல்லை செய்யாமல் இங்கிருந்து கிளம்பி விடு என்றது. விடாத கொசு, முதலில் என்னை பிடி பிறகு கொல்லலாம் என்றது. சரி என்றது சிங்கம். முதலில் தனது வாலால் ஒரேடியாக அதை அடித்து விடலாம் என நினைத்து வாலை ஆட்டியது. அதில் தப்பித்த கொசு நக்கலாக அவ்ளோ சுலபமா நான் சிக்கிடுவேனா என சத்தமாக காதுக்குள் ரீங்காரமிட்டது.
சிங்கத்தின் மூக்கின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது கொசு. கோபமான சிங்கம் மரத்தின் மேல் கொசுவை இடிக்க, கொசு தப்பித்து விட்டது. சிங்கத்திற்கு மூக்கில் பலத்த அடி. மீண்டும் கொசு சிங்கத்தின் காதில் ரீங்காரம் விட்டது. காலை தூக்கி காதில் அடித்தது. மீண்டும் கொசு தப்பித்தது. சிங்கத்திற்கு வலி பொறுக்கவில்லை. சோர்ந்து போன சிங்கத்தை பார்த்ததும், கொசு சத்தமாக சிரித்தது. சிங்கத்தின் முகத்தில் ஏறி நின்றி அதை சீண்டியது.
அமைதியாக இருந்த சிங்கம், நடந்து சென்றது. இதை பார்த்ததும் கொசு நீ தோற்றதை ஒத்துக்கொள்கிறாயா? என் கேட்டது. சிங்கம் எதுவும் பேசிக்கொள்ளாமல் மீண்டும் அமைதியாக நடந்தது. அப்படி எங்குதான் செல்கிறாய் என்றது கொசு. கொசு சற்றும் எதிர்பாராத நேரம் பார்த்து அருகில் இருந்த நதியில் முகத்தை முக்கியது சிங்கம். கொசு மூழ்கி இறந்தது.
ஆகையால் சுட்டி குழந்தைகளே நம்மை விட வலிமையானவர்களை ஏளனம் செய்வதால், ஏதோ ஒரு முறை நம்மால் ஜெய்த்துவிட முடியும். ஆனால் அது ஒரு சிறந்த செயலாக இருக்காது. அதனால் கண்டிப்பாக நாம் பாதிக்கப்படுவோம். ஆகையால் ஒரு செயலை செய்வதற்கு முன் நன்றாக சிந்தித்து செயல்படுங்கள்.












Click it and Unblock the Notifications