குழந்தை நீதி கதைகள்: இவ்ளோ குட்டியா இருக்கியே.. கலாய்த்த பின்னி!
சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டிஸ், எப்படி இருக்கீங்க.. விடுமுறையெல்லாம் முடிஞ்சு ஜாலியா ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டீங்களா.. சரி உங்களை யாராவது கேலி செய்தால் நீங்க என்ன செய்வீர்கள். இந்த கதையில் என்ன நடந்தது என்று படித்து தெரிந்து கொள்ளலாமா.. வாங்க
ஒரு அழகான கிராமம். அங்கு அழகான நீரோடை இருந்தது. அந்த ஊரே பச்சை பசேலென இருக்க, நீரோடையின் ஓரமாக பின்னி என்ற மரம் வளர்ந்து செழிப்பாக இருந்தது. பார்க்கவே கொப்பும் குலையுமாக பரந்து விரிந்து பெரிதாக இருந்தது.

அந்த வழியாக மக்கள் செல்லும்போது ஒரு முறையாவது பின்னியின் அருகில் நின்று ஓய்வெடுக்காமல் செல்ல மாட்டார்கள். அதன் அருகிலே சில்லி என்று இன்னொரு மரம் இருந்தது. அது பார்க்க கொஞ்சம் ஒல்லியாக, குட்டியாக இருந்தது. மக்களும் சில்லியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அதற்காக சில்லி ஒருநாளும் வருத்தப்பட்டது இல்லை. ஆனால் பின்னி மக்கள் தன்னை தான் பெரிதாக பார்ப்பதால் பெருமையின் உச்சத்திற்கே சென்றது. அதுமட்டுமில்லாமல் சில்லியை வம்பிழுக்கவும் ஆரம்பித்தது. நீ என் இவ்வளவு குட்டியாக இருக்கிறாய், பாத்தியா நீ எவ்வளவு மெலிந்து இருக்கிறாய் என நீயே அந்த நீரோடையில் பாரு என சொல்லி கேலி செய்தது.
இதை மக்கள் பார்த்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கு சில்லி, பின்னி ரெண்டு பேரும் நிழல் கொடுத்தால் போதும் என்பது போல கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். பின்னி, சில்லியை கேலி செய்வதை நிறுத்துவதாக தெரியவில்லை. ஒரு கட்டத்தில் சில்லி மனமுடைந்து கதறி அழுதது.
அன்றைக்கு திடீரென பலத்த புயல் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னி நான் ரொம்பவே பெரியவன் உறுதியானவன். தப்பித்துவிடுவேன். ஆனால் உன்னை பார்த்தாயா மிகவும் குட்டியாக இருக்கிறாய், முடிந்தால் உயிரோடு இருந்தால் பார்க்கலாம் என சத்தமாக சிரித்தது.
புயல் காற்று, சூறாவளியாக மாறியது. சில்லி பிழைப்பேனா என்பது போல காற்றில் இங்கும் அங்கும் ஆடியது. ஆனால் பின்னி ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் இருந்தது. ஒரு வேகமான காற்று கொஞ்சம் பலத்துடன் வீச, பின்னியை வேரோடு பிடுங்கி,நீரோடையில் வீசியது. ஆனால் சில்லி அதே காற்றில் அங்கும் இங்கும் ஆடியது.
மக்கள் யாருமே வெளியில் வராததால் இரவெல்லாம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. காலையில் காற்று, மழை அடங்கியதும் வெளியில் வந்து பார்த்தால் பின்னி நீரோடையில் விழுந்து கிடந்தது. பலரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். சில்லி உயிர் பிழைத்த நிம்மதியில் இருந்தது.
அப்போது தான் மக்களுக்கு புரிந்தது அமைதியாகவும், வளைந்து நெளிந்து கொடுத்ததாலும் சில்லி உயிர் பிழைத்தது. அதே போல பின்னியின் ஆணவமும், பிடிவாதமும் அதை வேரோடு சாய்க்க காரணம் என்றும் எண்ணினார்கள்.
ஆகவே குழந்தைகளா, வளைந்து கொடுக்க வேண்டிய நேரங்களில் கொடுப்பதால் அது நமக்கு நல்லதாக அமைய நிறையவே வாய்ப்பிருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications