ஓபிஎஸ் தியானம்... சசிகலா சமாதி சபதம்... செல்லூர் ராஜூ தெர்மாகோல் - 2017ல் மீம்ஸ் பிளாஷ்பேக்
2017ஆம் ஆண்டு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்து விட்டது. காரணம் ஓபிஎஸ் தியானம், சசிகலா சபதம், செல்லூரார் செயல்பாடுகள்தான்.
சென்னை: சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலம் கிண்டலடித்து மக்களை சிரிக்க வைப்பது அதிகரித்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அதிக அளவில் தீனி போட்டு பொன்னான ஆண்டாக அமைந்து விட்டது.
2017 ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் படு சுவாரஸ்யமான மாதமாக அமைந்து விட்டது. காரணம் ஜெயலலிதா சமாதியில் பிப்ரவரி 7ஆம் தேதி இரவு ஓபிஎஸ் செய்த தியானம்தான்.
இதேபோல சசிகலா பெங்களூரு சிறைக்கு செல்லும் போது, ஜெயலலிதா சமாதிக்கு சென்று 3 முறை அடித்து சபதம் செய்தார். அதே போல தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வைகை அணையை தெர்மகோல் மூலம் மூடினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
சசிக்கு எதிராக ஓபிஎஸ் அதிரடி
சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் காட்டிய அதிரடி மீம்ஸ் உலகை அதிர வைத்தது. எந்திரன் ரஜினியை வைத்து ஓபிஎஸ்க்கு மீம்ஸ் போட்டு அதிர வைத்தனர்.
ஒருவரை ஒருவர் பார்த்து
சசிகலா நள்ளிரவிலும் ஃபுல் மேக்கப் போட்டு வந்து பேட்டி கொடுத்தார். முகத்தில் நவரசங்களை காட்டி அவர் பேசியது, சட்டசபையில் ஓபிஎஸ், ஸ்டாலின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் என்றும் சொன்னது செம கலாய்.
ஜெ., சமாதியில் சசிகலா
ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா மூன்று முறை அடித்து சபதம் செய்தார். அந்த நேரத்தில் அது அதிரடியை கிளப்பியது. சசிகலா சபதம் தோற்றுப் போனாலும், 2017ல் சசிகலா மீம்ஸ் அல்டிமேட். ஏன் உடையலை என்று கேட்டு அதற்கு காரணமும் கூறினர்.
வைகை அணை ராஜூ
ஏப்ரல் மாதம் மழையில்லாமல் அணைகள் தண்ணீர் வற்றத் தொடங்கி விட்டன. வைகை அணை தண்ணீரை பாதுகாக்கிறேன் என்ற பேரில் தெர்மகோல் போட்டு அணை தண்ணீரை மூடினார். இது உம்மானமூஞ்சி காரர்களையும் குபீர் சிரிப்பை வரவழைத்தது.