தாமதம் செய்யாதீங்க.. தள்ளிப் போடாதீங்க.. உடனே பண்ணுங்கள்!
சென்னை: சிலருக்கு எதையும் உடனே செய்யப் பிடிக்காது. அப்புறம் பார்க்கலாம் என்று கூறியே அதை தள்ளி வைத்து வருவார்கள். இது சோம்பேறித்தனம் மட்டுமல்ல, புத்திசாலித்தனமும் கிடையாது.
எதை செய்ய நினைத்தாலும் அதே உடனே செய்ய வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். அதுதான் வெற்றி பெறவும், நம்மை முழுமையானவராக மாற்றவும் ஒரே வழி.
நன்றே செய் அன்றே செய் என்பார்கள். அது போல ஒரு செயலை செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதை உடனே செய்து முடிக்க வேண்டும். அது தான் வெற்றிக்கான சிறந்த வழி. நாம் சில விஷயங்களைத் தள்ளிப் போட்டால் அது நமக்குத் தான் துன்பத்தை விளைவிக்கும்.

எல்லா செயல்களுக்கும் பொருந்தும்
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் அது நாம் பணம் சேமிப்பதற்காக மட்டுமல்ல. நாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும். நம்முடைய அன்றாட அலுவலகப் பணிகளை அன்றே முடித்துவிட வேண்டும். தள்ளிப் போட்டால் மலையெனக் குவிந்து நம் பணிகள் நம்மைப் பாடாய்படுத்திவிடும். மாணவர்கள் அன்றையப் பள்ளிகளில் நடத்தும் பாடங்களை அன்றே படித்து முடிக்க வேண்டும்.

நாளை நாளை என தள்ளிப் போடாதீங்க
படிக்காமல் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தால் தேர்வு நாளன்று முழுவதும் படிக்க முடியாது. அதன் விளைவு நம் மதிப்பெண் குறைந்து விடும். அதனால் உங்களுடைய அன்றாடப் பணிகளைத் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் முடிக்கப் பழகுங்கள். நாளை என்ற பேச்சுக்கு இல்லை என்று அர்த்தம் என்பார்கள்.

தாயை நினையுங்கள்
அது போல உங்கள் வேலைகளை நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் சுறுசுறுப்புடன் செயல்படுங்கள். வேலை செய்யும் போது அது உங்களுக்குக் கஷ்டமாகத் தோன்றினால் உங்கள் அன்னையை நினைத்துக் கொள்ளுங்கள். காலை எழுந்து வீடு மெழுகி கோலமிட்டு பிள்ளைகளைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி கணவனைத் தயார் செய்து அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

எத்தனை எத்தனை வேலைகள்
பிறகு வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து பிள்ளைகள் வருவார்கள் என்று சிற்றுண்டி தயாரித்து மறுபடியும் எல்லா வேலைகளையும் முடித்து அவள் உறங்க இரவு பதினொன்றாகி விடும். ஒரு நாள் கூட வேலையைத் தள்ளிப்போடாமல் தொடர்ந்து நமக்காகவே ஓடியோடி வேலை செய்யும் உங்கள் அன்னையை நினைவு கூறுங்கள். பிறகு பாருங்கள் எல்லா வெற்றியும் உங்களுக்குத்தான்.

விட்டொழியுங்கள்
சோம்பேறித்தனத்தை விட்டொழியுங்கள். உங்கள் வேலைகளை உடனுக்குடன் செய்து பாருங்கள். உங்கள் சுறுசுறுப்பால் உங்கள் சுற்றுவட்டாரத்தின் பாராட்டு மழையில் நனைவீர்கள். நம்முடைய இலக்கினை நோக்கிப் பயணம் செய்யும் போது நாம் அதற்கான முயற்சியை ஒருகாலும் தள்ளிப் போடக் கூடாது. அதனால் உங்கள் இலக்கை நோக்கிச் சுறுசுறுப்புடன் பயணியுங்கள். எதையும் தள்ளிப் போடாதீங்க சட்டுன்னு உங்கள் பணிகளை முடிங்க சந்தோசமா இருங்க.












Click it and Unblock the Notifications