மனைவியை 130 கி.மீ சைக்கிளில் வைத்து.. புதுச்சேரிக்கு கூட்டி வந்த கும்பகோணம் முதியவர்!
புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவால் நாடுமுழுவதும் பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பதற்காக கும்பகோணத்திலிருந்து 130 கி.மீ சைக்கிளில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து வந்த முதியவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், உலகம் முழுவதும் இதுவரை 95,657 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடுமுழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் விமானம், ரெயில்கள், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட மக்களின் பொது போக்குவரத்து அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு
அதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு அருகே உள்ள தமிழகத்தின் அண்டை மாவட்ட மக்களால் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், புதுவையுடன் கடலூர், விழுப்புரத்தை இணைக்கும் 4 முக்கியச்சாலைகள் மட்டுமில்லாமல் 82 சிறிய எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்திற்கும் தமிழகத்திற்கும் இடையேயான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் முதியவர்
இந்த சூழ்நிலையில், 65 வயது முதியவர் ஒருவர் புற்றுநோய் பாதித்த தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்க, கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்து வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (65) தான் அந்த முதியவர். இவரது மனைவி மஞ்சுளா (60). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மஞ்சுளாவுக்கு நோய் முற்றியுள்ளது.

கீமோதெரபி சிகிச்சை
இதையடுத்து அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். அதனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கும்பகோணத்திலுள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தமிழகம் புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதுடன், பேருந்துகள், ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருப்பதால், புதுச்சேரிக்கு எப்படிச் செல்வது என்று புரியாமல் தவித்திருக்கிறார் அறிவழகன்.

சைக்கிளில் மனைவியுடன்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியில்லை. ஊரடங்கு முடிந்தபிறகு செல்லலாம் என்று நினைக்கும் அளவுக்கு மனைவியின் உடல்நிலை சீராக இல்லை. நோயுற்ற மனைவி வலியால் துடிப்பதை பார்க்குமளவுக்கு சக்தியில்லை. அதனால் தனது மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று நினைத்த முதியவர் அறிவழகன், தன்னிடம் இருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.

நெகிழ வைக்கும் பயணம்
கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர்? எவ்வளவு நேரமாகும், அவ்வளவு தூரம் சைக்கிளில் செல்ல முடியுமா? நம்மால் சைக்கிளை மிதிக்க முடியுமா? வழியில் பஞ்சராகிவிட்டால் என்ன செய்வது. போலீஸ் இருப்பார்களே என எதைப்பற்றியும் யோசிக்கவில்லை முதியவர் அறிவழகன். அவரின் சிந்தனை அனைத்தும் தனது மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான்.

வேட்டியுடன் கிளம்பி விட்டார்
இடுப்பில் கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு மனைவியை சைக்கிளில் அமர வைத்த அறிவழகன், மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 130 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து, விடியற்காலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

விரைந்து சிகிச்சை
ஆனாலும் முதியவர் அறிவழகன் சைக்கிளிலேயே வந்த தகவலைக் கேட்ட மருத்துவர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள், அவருக்கு தேவையான சிகிச்சைகளைக் அளித்திருக்கிறார்கள். மேலும் இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்தவர்கள், அவர்களுக்கு தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

என்ன ஒரு பாசம்
2 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் இருவரையும் தங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இலவசமாக கும்பகோணம் அனுப்பி வைத்திருக்கிறது ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம். நோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவிக்கு எப்படியாவது சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக, 130 கி.மீ தூரம் சைக்கிளிலேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த முதியவரின் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications