மாண்டு கிடந்த கணவர்.. முத்தமிட்டு ஐலவ்யூ சொல்லி அழுத நிகிதா.. இதோ ராணுவ பணிக்கு கிளம்பி விட்டார்!
வீரர் விபுதி சங்கர் மனைவி நிகிதா ராணுவத்தில் சேர்கிறார்
சென்னை: சடலமாக கிடந்த கணவனுக்கு முத்தமிட்டு.. அவர் காதருகில் சென்று "ஐ லவ் யூ" என்று கதறி அழுத நிகிதாவை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. "அவர் என்கூடவே இருப்பது போல உணர்கிறேன்... அவரது ராணுவ உடையை அணிந்து, அதே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் ஒரே லட்சியமாக உள்ளது என்று ஆழ்ந்த நம்பிக்கை பிடிப்புடன் சொல்கிறார் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் விபுதியின் மனைவி நிகிதா!!
யாராலும் மறக்க முடியாத நாள் 2019, பிப்ரவரி 14.. புல்வாமா தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் சரிந்து மாண்டனர் 44 வீரர்கள்! இந்த தாக்குதல் நடந்து ஒரு வருடம் கடந்தும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.. இப்படி ஒரு தாக்குதல் 20 வருஷங்களில்கூட கிடையாது என்று சொல்லும் அளவுக்கு அனைவரையும் உலுக்கிவிட்டது!
தீவிரவாதிகளுக்கும் நம் வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில்... ஒரு மேஜர் உட்பட 4 வீரர்களும் வீர மரணமடைந்தனர். 20 மணி நேரம் நடந்த அந்த சண்டையில் உயிரிழந்தது விபுதி சங்கரும் ஒருவர். வெறும் 35 வயதுதான்!

இறுதி சடங்கு
திருமணமாகி 9 மாதங்கள்தான ஆகியிருந்தது... அன்றைய தினம், இறுதி அஞ்சலியில் வீரர் விபுதியின் சடலம் கிடத்தப்பட்டிருந்தது.. மனைவி நிகிதா கவுல் அங்கே வந்தார்... கணவர் உடலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.. பிறகு அருகில் வந்து அவருக்கு முத்தமிட்டார்.. கணவர் சடலத்தின் காதுக்கு அருகே சென்று ஐ லவ் யூ என்று கதறினார்.

வீர வணக்கம்
கடைசியாக "ஜெய்ஹிந்த்" என்று வீரத்துடன் முழக்கமிட்டார்.. அங்கிருந்தோர் எல்லோருமே இதை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு விட்டனர்.. இதனை டிவியில் பார்த்த பொதுமக்களும் கலங்கிவிட்டனர்... 2018, ஏப்ரல் மாதம் தான் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது... கல்யாணம் ஆகி ஒரு வருடம்கூட முடியவில்லை... தங்களின் முதல் கல்யாண நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று இருவருமே ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.. அப்போதுதான் வீரர் விபுதி உயிரிழக்க நேரிட்டது!

ராணுவ பணி
இந்த நிலையில், நிகிதா ராணுவத்தில் சேர தயாராகிவிட்டார்.. குறுகிய கால பணி திட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரியாவதற்கான எழுத்து தேர்வை எழுதினார். ராணுவ அதிகாரியின் விதவை என்ற அடிப்படையில், வயது வரம்பு அவருக்கு தளர்த்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். அது சம்பந்தப்பட்ட இன்டர்வியூ-விலும் கலந்து கொண்டார்.
இப்போது தகுதிப் பட்டியல் அறிவிப்புக்காக காத்து கொண்டிருக்கிறார். விரைவில் ராணுவத்தில் இணைந்துவிடுவார்... தாக்குதல் நடந்து ஒருவருடம் ஆன நிலையில், நிகிதாவின் இந்த முயற்சியும், விடாப்பிடி கொள்கையும் ஆச்சரியமாக்க வருகிறது.. காஷ்மீரில் பிறந்தவர்.. டெல்லியில் ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர்... ஆனால், ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே இப்போதைக்கு நிகிதாவின் விருப்பம்.

ராணுவ உடை
விபுதியின் ராணுவ உடையை அணிந்து, அதே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் ஒரே லட்சியமாக உள்ளது.. அதற்காகத்தான் ஏற்கனவே பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.. இது சம்பந்தமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் நிகிதா பேசும்போது சொல்கிறார்:
Recommended Video

புத்திசாலித்தனம்
"ஒழுக்கத்தின் மறுஉருவம்தான் விபு... அன்பு, இரக்கம், தைரியம், புத்திசாலித்தனம், அடுத்தவருக்கு உதவி செய்தல் என எல்லாவற்றிலும் சிறந்தவர்... நிச்சயம் அவரை பெருமைப்படுத்துவேன்... நாம் வாழும் வரை நம் காதலும் மறைந்துபோகாது.. அவர் என்கூடவே இருப்பது போல உணர்கிறேன்... என்னுடைய இந்த முடிவுதான் நான் அவருக்கு செலுத்தும் நிஜமானஅஞ்சலி" என்று சொல்கிறார்.
தாங்க முடியாத வேதனை, வலிகள் எவ்வளவோ இருந்தாலும், இளம்விதவை நிகிதா ராணுவத்தில் தன்னை தயார் படுத்தி கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது... இவர்களின் காதலும் பிரமிக்கத்தக்கது!












Click it and Unblock the Notifications