புத்திசாலியாக இருங்கள்.. உணர்ச்சிகளுக்கு பலியாகி விடாதீர்கள்!
சிலர் நல்ல புத்திசாலியாக இருப்பார்கள்.. அறிவாளியாக இருப்பார்கள்.. ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள்.. அப்படி இருப்பது அவர்களது ஞானத்தை ஓவர்டேக் செய்து அவர்களது திறமையை காலி செய்து விடும்.
உணர்ச்சிவசப்படல் எப்போதுமே உடம்புக்கு மட்டுமல்ல.. நமது மனதுக்கும் கூட நல்லதில்லை. ஆழ்ந்து யோசித்து நிதானித்து செயல்படுத்தும் எந்தக் காரியமும் தவறாக முடியாது.. அதைத்தான் சுருக்கமாக பெரியவர்கள்.. பதறிய காரியம் சிதறும் என்று அழகாக சொல்லி வைத்துள்ளனர்.
எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்ய வேண்டும் அதே சமயத்தில் புத்திசாலித்தனமாகவும் செய்ய வேண்டும். ஒருவருடைய உயர்வுக்கு புத்திசாலித்தனம் மட்டும் பத்தாது பொறுமையும் அவசியம். சென்னையில் பிரபல கம்பெனியில் மேலாளராகப் பணிபுரிகிறான் ரவி. கிளர்க்காகப் பணிபுரிந்துத் தன் திறமையால் பத்து வருடங்களுக்குப் பிறகு மேலாளராகப் பணிபுரிகிறான். அதே கிளையில் புதிதாக அக்கம்பெனியின் ஜி.எம் மாகப் பதவியேற்றான்இருபத்தேழு வயதான மதன்.
பதவியேற்ற மூன்று மாதங்களிலேயே கம்பெனிக்கு மும்மடங்கு லாபத்தைத் தன் திறமையால் சம்பாதித்துக் கொடுத்தான்.முதலாளி அவன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து ரவி மதன் மீது கோபம் கொண்டான். ஒரு நாள் மும்பையில் உள்ள கம்பெனியை புதிதாகக் கட்டுவது தொடர்பாக முதலாளி ரவியையும் மதனையும் ஆலோசனைக்கு அழைத்தார்.
அப்போது ரவி அந்த இடத்தில் புது கட்டிடம் கட்டலாம் என்றும் அதற்காக நாம் செலவிடும் தொகையை ஆறே மாதங்களில் நாம் மறுபடியும் சம்பாதித்துவிடலாம் என்றான். ஆனால் மதனோ வேண்டாம் சார் இந்த ஐடியாவைக் கைவிடுங்கள் என்றான். உடனே ரவி மதனைப் பெரிய அறிவாளி என்று நினைத்தேன் ஆனால் இப்படி அறிவில்லாமல் பேசுகிறாரே இதற்குத் தான் என்னைப் போன்ற புத்திசாலிகளுக்கு நீங்கள் இப்பதவியைத் தரவேண்டும் என்றுக் கூறினான். உடனே முதலாளி கோபமடைந்து ஏன் இ்ப்படிக் கூறுகிறாய் மதன் என்றார்.
Monday Motivation: நல்லது நினைச்சா நல்லது.. கெட்டது நினைச்சா கெட்டது!
உடனே மதன் சார் அந்த இடம் வாடகைக் கட்டிடம் அதற்கான ஒப்பந்தம் இன்னும் மூன்று மாதங்களில் முடிகிறது. அது மட்டுமில்லாமல் கம்பெனி இருப்பது பழைய மும்பையில் அதனால் வாடிக்கையாளர்களும் குறைவு. அதற்குப் பதிலாக புதிய மும்பையில் நாம் வாங்கியிருக்கும் இடத்தில் நிறுவனத்தைக் கட்டினால் வாடிக்கையாளர்களும் பெருகுவர் என்றுக் கூறினான். அவனது புத்திசாலித்தனத்தைக் கண்டு மகிழ்ந்த முதலாளி மும்பை நிறுவனத்தின் பொறுப்பாளராக அவனை நியமித்தார். பார்த்தீர்களா குட்டீஸ் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டும் போதாது நாம் செய்யும் செயல்களை உணர்ச்சிவசப் படாமல் செய்ய வேண்டும்.
எந்த ஒரு செயலையும் பதறாமல் புத்திசாலித்தனத்தோடு செய்தால் பெயரும் புகழும் உங்களைத் தேடி வரும். அதனால் உங்கள் வேலைகளை உணர்ச்சிவசப்படாமல் திறம்பட செய்து வெற்றிக் காணுங்கள்.