காதலித்துப் பாருங்கள்.. கனவுகள் கை கூடும்!
காதலிப்பது குற்றமா .. நிச்சயமாக இல்லவே இல்லைங்க.. காதல்தாங்க மனசையும், மனுஷனையைும் செம்மைப்படுத்தும் அரிய மருந்து. ஆதலினால் காதல் கொள்வீர் என்று பெரியவர்களே சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.. இதை விட பெரிய அங்கீகாரம் வேறு என்ன இருக்கு சொல்லுங்க!
காதல் செய்தால் மனம் மாறும். எப்படி என்று கேட்கிறீர்களா. கோபப்படுபவரையும் சாந்தப்பட வைக்கும் காதல் முரடனையும் மனிதனாக்கும் காதல் பிடிக்காததையும் பிடிக்க வைக்கும் காதல் உண்மையான அன்பினால் உலகையே மறக்க வைக்கும் காதல். காதலிக்கும் போது கனவுகள் வரும் கனவுகள் பல நனவாவதும் அந்த காலங்களில் தான்.
உள்ளங்கள் சங்கமித்து உணர்வோடு கலந்த நீயின்றி நானில்லை என்று உருக வைக்கும் காதல். காதல் எப்போ எப்படி வரும் என்று தெரியாது எந்த வயதிலும் வரும். உங்களுக்காக மற்றவர் ஒரு செயல் செய்தால் அதனால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காதலிக்கும் போது அப்படியே வானத்தில் மிதப்பது போல் தோன்றும். மனதுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறக்கும். வாழ்வின் எல்லை வரை இந்த பந்தம் நீடிக்க வேண்டும் என்று மனம் நினைக்கும்.
காதலின் அடையாளச் சின்னம் ரோஜா மலர். ரோஜா மலரை கையில் ஏந்தி தன் காதலைத் தன் துணையிடம் வெளிப்படுத்தும் போது மனம் படும் பாட்டை சொல்ல முடியாது. உன்னைப் பார்த்த நொடியில் நான் என்னை மறந்தேன் என்று கவிதை பாட ஆரம்பித்து விடுவீர்கள். காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். உண்மை தான். ஏனென்றால் காதல் ஏழை பணக்காரன் பார்ப்பதில்லை சாதி மதம் பார்ப்பதில்லை நல்லவன் கெட்டவன் பார்ப்பதில்லை வயதைப் பார்ப்பதில்லை அழகைப் பார்ப்பதில்லை. ஒரு சிலரை ஏனோ பார்த்தவுடன் பிடித்து விடுகிறது.
காதல் இடம் பொருள் அறியாது. காதல் வருவதற்குக் காரணங்கள் கிடையாது. காதலித்துப் பாருங்கள். கனவுகள் மட்டுமல்ல வானம் கூட வசப்படும்.