ஆரம்பிக்கிறப்போ இருக்கும் தில்.. முடியும் வரை இருக்க வேண்டும்!
ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும்போது இருக்கும் மன உறுதி.. அதை முடிக்கும்போதும் இருக்க வேண்டும்.. அல்லது அது முடியும் வரை இருக்க வேண்டும்.
எந்த ஒரு செயலைச் செய்தாலும் வெற்றி அடையும்வரை மனஉறுதியுடன் போராட வேண்டும். மன உறுதி ஒன்று தான் உங்களுடைய மாபெரும் சக்தி. நீங்கள் உறுதியுடன் உங்கள் வேலைகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். சிலர் ஒரு செயலை ஆரம்பிக்கும் போது மன உறுதியோடு ஆரம்பிப்பர். நாளாக நாளாக அதன் மீதான நம்பிக்கைக் குறைந்து விடுகிறது. அவ்வாறு இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை உத்வேகத்தோடு செயல்பட்டால் வெற்றி உங்கள் வசமே.
வெற்றி எளிதில் கிடைப்பதில்லை. எவனொருவன் மன உறுதியோடு தன் இலக்கை நோக்கிப் பயணிக்கிறானோ அவனே வெற்றி அடைகிறான். நாம் செல்லும் பாதையில் இருக்கும் தடைக்கற்களைக் கண்டு துவளாமல் அதையெல்லாம் மனஉறுதியோடு தகர்த்தெறிந்து விட்டு வெற்றியை நோக்கி வீறுநடை போடுங்கள். மனஉறுதியே மனிதனை மேன்மேலும் உயர்த்தும்.
சாதனைகள் படைக்க வேண்டும் சரித்திரத்தில் இடம்பெற வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய மனஉறுதியோடு போராடுங்கள். தோல்விகள் அடைந்தாலும் துவளாது குறைகளைக் களைந்து வெற்றியை அடையும் வழியைத் தேடுங்கள். என்னால் முடியும் நான் வெற்றி பெற்றே தீருவேன் என்ற உறுதியோடு உங்கள் வேலைகளில் ஈடுபடுங்கள். தோற்பது தவறில்லை ஆனால் தோற்றுக் கொண்டே இருப்பது தான் தவறு.
உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்குவதற்கு நீங்கள் உங்கள் குறிக்கோளில் வெற்றி பெற வேண்டும்.திட்டமிட்டு மன உறுதியோடு உங்கள் குறிக்கோளை நோக்கிப் பயணியுங்கள். வெற்றி நிச்சயம். மனதில் உறுதி வேண்டும் வாழ்வை மென்மேலும் உயர்த்திட உறுதி வேண்டும்.